ப்ரீத்தி அஸ்ரானி


அயோத்தி படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ப்ரீத்தி அஸ்ரானி (Preethi Asrani). குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் துணை கதாபாத்திரங்கள், பின் கதாநாயகி என படிப்படியாக வளர்ந்து வருகிறார். அயோத்தி படத்தின் வெற்றிக்குப் பின் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில்  நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ப்ரீத்து அஸ்ரானி தன்னைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.


எனக்கு ஏழு மொழிகள் தெரியும் 


இந்த நேர்காணலில் வெவ்வேறு மொழி படங்களில் நடிப்பது குறித்து அவர் பேசுகையில் ”தொடச்சியாக வெவ்வேறு மொழி படங்களில் நடிப்பது எனக்கு பிடிக்கும். புதிய மொழிகளைக் கற்பது தான் என்னுடைய ஹாபி. நான் என்னுடைய ஓய்வு நேரத்தில் என்ன செய்வேன் என்று என்னிடம் யாராவது கேட்டால் நான் வேறு மொழிகளைக் கற்பேன் என்றுதான் பதில் சொல்வேன்.


புதுப்புது இடங்களுக்கு சென்று அங்கு உள்ள மக்களிடம் நீங்கள் அவர்களின் மொழியில் பேசும்போது உங்களுக்கு இடையிலான உரையாடல் சுலபமாகிறது. நான் ஹைதராபாத்தைச் சேர்ந்தவள் என்றாலும் நன்றாக தமிழ் பேசுவேன். சென்னை வரும்போது இங்கிருப்பவர்களிடம்  நான் தமிழில் பேசும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். என்னால் மொத்தம் ஏழு மொழிகளைப் பேச முடியும். வெவ்வேறு மொழிகளை கற்பது ஒரு நடிகராக எனக்கு நிறைய உதவியாக இருக்கிறது. மொழி தெரியும்போது நடிப்பில் உணர்ச்சிகளை எளிதாக கொண்டு வரமுடியும். அதே நேரம் மொழி தெரியும் போது நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை கவனிக்காமல் உங்கள் நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்” என்று கூறியுள்ளார்.


அயோத்தி படம் குறித்தி


அயோத்தி படம் குறித்து பேசியபோது “அயோத்தி நான் தமிழில் நடித்த முதல் படம். இந்தப் படத்தில் நடிக்கும்போது நான் படத்தின் வெற்றியைப் பற்றி நினைக்கவில்லை. என்னுடை 100 சதவீத உழைப்பை நான் இந்தப் படத்திற்கு கொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். அயோத்தி படம் வெளியானபோது அதற்கு வந்த ரெஸ்பான்ஸ் என்னை ஆச்சரியப்படுத்தியது. இன்று என்னிடம் பேசும் இயக்குநர்கள் எல்லாரும் அயோத்தி படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிதான் பேசுகிறார்கள். விளைவை எதிர்பார்க்காமல் ஒரு வேலையை செய்வது நல்லது என்று நினைக்கிறேன்.


அயோத்தி படத்தின் கதையில் ஒரு நல்ல மெசேஜ் இருந்தது. என்னைப் பொறுத்தவரை ஒரு படத்தின் கதை ரொம்ப முக்கியம். நான் நடிக்கத் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களுக்கு ஒரு தனித்துவம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். தற்போது ப்ரீத்தி அஸ்ரானி சதீஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.