நடிகர் மோகன் நடித்த மெல்ல திறந்தது கதவு படம் வெளியான நேரத்தில் என்ன நடந்தது என்பதை ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 


ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் மைக் மோகன், ராதா, அமலா, விசு, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்த படம் மெல்ல திறந்தது கதவு. எம்.எஸ்.விஸ்வநாதன் - இளையராஜா இருவரும் இணைந்து இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் எவர்க்ரீன் நினைவுகளாக உள்ளது. முதல் காதலில் தோல்வி அடைந்த மோகன், முறைப்பெண்ணான ராதாவின் காதலை அறிந்து அதனை ஏற்க மறுக்கிறார். மேலும் தனது முதல் காதலி அமலாவின் மரணத்தில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் அவரை ராதா மீட்டாரா, தான் ஆசைப்பட்டது மாதிரி மணமுடித்தாரா...முடிவு என்ன என்பது தான் இப்படத்தின் கதை. 






வசூலில் பெரும் சாதனைப் படைத்த இப்படம் குறித்து ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருணா குகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது மெல்ல திறந்தது கதவு படம் ரிலீஸ் ஆனபோது மதுரை விநியோகஸ்தர் ஒருவர் முதலில் இரண்டாம் பாதியையும் அதன் பிறகு முதல் பாதியையும் திரையிடுவது நல்லது என்று நினைத்தார். ஆனால் இந்த விஷயம் ரசிகர்களுக்கு தெரியாது. அவர்களும் இரண்டாம் பாதியை பிளாஸ்பேக்கை முதலிலும், முதலில் நடக்கும் நிகழ்காலத்தை இடைவேளைக்குப் பின்னரும் பார்த்து ரசித்தனர். 










இந்த மாற்றம் நல்ல வரவேற்பைப் பெற்றது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது! இந்த சம்பவம் குறித்த செய்தி தியேட்டர் வட்டாரங்களில் மிக வேகமாக பரவியது மற்றும் அனைத்து தியேட்டர் ஆபரேட்டர்களும் அதையே செய்ய ஆரம்பித்தனர். எனவே முதல் மற்றும் இரண்டாம் பாதியை மாற்றி மறு தணிக்கைக்கு அனுப்ப ஏவிஎம் நிறுவனம் முடிவு எடுத்தது. சென்சார் குழுவினர் மகிழ்ச்சியடைந்தனர்.  மேலும் அங்கிருந்த  ஒரு அதிகாரி கேலி செய்யும் விதமாக புதிய தலைப்பு என்ன? மெல்ல திறந்தது கதவுமா அல்லது கதவு திறந்தது மெல்லவா? என கேட்டதாக தெரிவித்துள்ளார்.