ஹாலிவுட்டின் பிரமாண்ட படைப்பாக வெளியாகியுள்ள அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வசூலை வாரிக் குவித்து வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி  வெளியான திரைப்படம் ‘அவதார்’. கிராபிக்ஸ் காட்சிகள் என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தொழில் நுட்பத்தில் மிரட்டிய அவதார் படம் உலகளவில் அதிகமான வசூல் சாதனை செய்த படம் என்ற சாதனையை இன்றளவும் தக்கவைத்துள்ளது. இந்த வெற்றியால் அவதார் படத்தின் அடுத்த 4 பாகங்கள்  2 ஆண்டுகள் இடைவெளியில் வெளிவரும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.






அதன்படி அதன்படி  2 ஆம் பாகமான அவதார்: தி வே ஆப் வாட்டர் படம் டிசம்பர் 16 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. இந்தியாவிலும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி  ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம் வசூலை அள்ளியுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக பண்டோரா உலகின் மக்களுக்கு தன்னால் ஆபத்து நேருகிறது என்பதை அறியும் ஹீரோ ஜேக் சல்லி, குடும்பத்தினரோடு கடல்வாசிகள் வாழும் பண்டோரா உலகத்தில் தஞ்சமடைகிறார். அவரை வில்லனான கர்னல்  எப்படி பழிவாங்க முற்படுகிறார் என்பதே 2 ஆம் பாகத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. 






கதைக்களம் அனைவரும் அறிந்த ஒன்று தான் என்ற போதிலும், , விஷூவல் காட்சிகள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்தது. தமிழ் டப்பிங் பார்க்க சென்ற மக்களுக்கு சமகாலத்தில் பேசப்படும் வார்த்தைகளும் இடம் பெற்றிருந்ததால் கலகலப்பாக அவதார் படம் அமைந்தது. இந்நிலையில் அவதார் படம் 3 நாட்களில் உலகளவில் ரூ.3600 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இந்தியாவை பொறுத்தவரை 2 நாட்களில் ரூ.100 கோடியை அசால்ட்டாக அள்ளிய அவதார் படம், 3 நாட்களில் ரூ.150 கோடியை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. கொரோனாவுக்குப் பின் வெளியாகி வசூலை அள்ளிய படம் என்ற சாதனையை அவதார் தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.