நடிகர் ரஜினிகாந்தை இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பெரி ஓ பாரல் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.


தமிழ் சினிமா, இந்தியா தாண்டி உலகம் முழுவதும் தன் நடிப்புக்காகவும் ஸ்டைலுக்காகவும் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.  சினிமா தாண்டி அரசியலிலும் இன்றளவும் ரஜினிகாந்தின் பெயர் அவ்வப்போது அடிபட்டு பரபரப்பைத் தொடர்ந்து கிளப்பி வருகிறது.


இந்நிலையில் இந்தியாவின் முக்கியப் பிரபலங்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தை இன்று இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பெரி ஓ பாரல் நேரில் சந்தித்துப் பேசினார்.


மேலும் ரஜினிகாந்துடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பெரி ஓ பாரல், “சினிமா கலாச்சாரங்களை இணைக்கிறது. வெவ்வேறு நாடுகளுக்கு இடையேயான மக்களை இணைக்கிறது. பிரபல நடிகர் ரஜினிகாந்தை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி, அவரது ஜெயிலர் படத்துக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.


 






இந்நிலையில், இந்தப் பதிவு இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது. 


முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் டி.ஜே.ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் தனது நீண்டநாள் நண்பரும் நடிகருமான அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடிப்பதாகத் தகவல் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது.


மற்றொருபுறம், சன் பிச்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்துள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்  மோகன்லால்,  தமன்னா, ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 


மேலும் தன் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படப்பிடிப்பிலும் ரஜினிகாந்த் முழுவீச்சில் பங்கு பெற்று வருகிறார். 


விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் இப்படத்தில்  முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடிக்கின்றனர்.80களின் பிரபல நடிகை ஜீவிதா, வெகுகாலத்துக்குப் பிறகு ரஜினியின் தங்கையாக இந்தப் படத்தில் நடிக்கிறார்.


ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கும் நிலையில், லைகா இப்படத்தை தயாரிக்கிறது.இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை,   மும்பை, புதுச்சேரி எனத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் ரஜினி ஏற்றிருக்கும் மொய்தீன் பாய் கெட் அப்பில் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் வீடியோக்கள்  முன்னதாக இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளியது குறிப்பிடத்தக்கது.