Arvind Swamy: திறமையான நடிகர்கள், ஆனால் மாநிலத்தை ஆள முடியுமா? வைரலாகும் அரவிந்த்சாமியின் பேச்சு!

Arvind Swamy : திரைப்பட நடிகர்கள் அரசியலில் இறங்குவது பற்றியும் அவர்களின் அரசியல் நிலைபாடு பற்றியும் நடிகர் அரவிந்த்சாமி பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

திரை நட்சத்திரங்களாக பிரபலமான பலரும் அரசியலில் களம் கண்டு அதில் சிலர் அபாரமான வெற்றியும் அடைந்துள்ளனர். ஆனால் ஒரு சிலரோ சென்ற வேகத்திலேயே திரும்பியும் உள்ளனர் என்கிறது வரலாறு. அந்த வகையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், நெப்போலியன், கமல்ஹாசன், குஷ்பூ, ரோஜா, நக்மா எனப் பலரும் அடங்குவார்கள். அந்த லிஸ்டில் புதிதாக நுழைந்துள்ளார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான தளபதி விஜய். 

Continues below advertisement

இந்நிலையில், தன்னுடைய ஓட்டு குறித்து நடிகர் அரவிந்த்சாமி பேசியிருந்த பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

 

ரஜினியின் அரசியல் :  

நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக அரசியல் குறித்து மேடைகளில் பேசி அரசியலுக்குள் இறங்க இருக்கும் தன்னுடைய விருப்பதை பகிரங்கமாகத் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் மும்மரமாக செய்து வந்தார். அரசியல் கட்சி தொடங்குவதற்காக தேதியை எல்லாம் அறிக்கையாக வெளியிட்டு விட்டு, பின்னர் தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் இறங்கும் முடிவை வாபஸ் வாங்குவதாகச் சொல்லி    பின்வாங்கினார். 

 


கமலின் அரசியல் பிரவேசம் : 

அவரைத் தொடர்ந்து முழு முயற்சியுடன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி ஆவேசமாக எதிர்க்கட்சிகளை எதிர்த்து பேசி வந்தார் உலகநாயகன் கமல்ஹாசன். தனி கட்சியாக இருப்பார் என எதிர்பார்த்தால் திடீரென திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தார். 

விஜய்யின் அதிரடி அறிவிப்பு :

தற்போது தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து வரும் நடிகர் விஜய் பல ஆண்டுக்காகவே அரசியலில் குதிப்பது போன்ற பேச்சுக்கள் அடிபட்டு வந்த வண்ணமாகவே இருந்தன. அந்தப் பேச்சுக்கள் வெறும் பேச்சுக்களாகவே மாறிவிடக் கூடாது என தடாலடியாக 'தமிழக வெற்றி கழகம்' (Tamizhaga Vetri kazhagam) என்ற பெயரில் கட்சியை சில தினங்களுக்கு முன்னர் தொடங்கி, அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் விஜய். மேலும் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் அதிரடியாக பல முடிவுகளை எடுத்து அதை தெளிவுபடுத்தினார். 

 

தெளிவான முடிவு : 

வரும் 2024ல் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவும் போவதில்லை, யாருக்கும் ஆதரவாக இருக்கவும் போவதில்லை என்பதை தெளிவுபடுத்தி 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்து இருந்தார். மேலும் தற்போது ஒப்பந்தமாகியுள்ள படங்களை நடித்த பிறகு நடிப்பில் இருந்து ஓய்வு பெற்று முழு நேரமாக அரசியலில் இறங்க போவதையும் குறிப்பிட்டு இருந்தார். போக போக தான் அவரின் அரசியல் நிலைப்பாடு குறித்து தெரியவரும். 

அரவிந்த்சாமியின் கருத்து :

இந்த நேரத்தில் நடிகர் அரவிந்த்சாமி அரசியல் குறித்து பேசிய இருந்த பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. "ரஜினி, கமல், விஜய் என அனைவருமே மிகவும் திறமையான நடிகர்கள். அவர்கள் அரசியலில் இறங்கினால் அவர்களின் ரசிகன் என்பதற்காக நான் ஓட்டு போட்டு விட மாட்டேன். அவர்கள் இந்த சமுதாயத்தை எந்த அளவுக்கு முன்னேற்ற முடியும்? என்னென்ன மாற்றங்களை கொண்டு வர முடியும்? அவர்களின் கருத்து மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா? என பல வகையிலும் அவர்களின் செயல்பாட்டை கணித்த பிறகே வாக்களிப்பேன். 

 

அவர்கள் சிறந்த நடிகர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களால் ஒரு மாநிலத்தை ஆளக்கூடிய திறன் படைத்தவர்களா? அந்த அளவுக்கு அவர்களின் தகுதி உயர்ந்துவிட்டதா? அவர்கள் இதை செய்ய முடியுமா? என்பதை அவர்களின் அரசியல் நிலைப்பாடு மூலம் புரியவைக்க வேண்டும்” எனப் பேசி இருந்தார் நடிகர் அரவிந்த்சாமி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னதும் தற்போதைய நிலவரமும் ஒத்துபோகிறதே என கருத்து தெரிவித்து வருகிறார்கள் சமூக வலைத்தளவாசிகள்.  

Continues below advertisement
Sponsored Links by Taboola