நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு  பிடிவாரண்டு பிறப்பித்து ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


அக்குபஞ்சர் மருத்துவரான சீனிவாசன் சினிமா மீது கொண்ட மோகத்தின் காரணமாக 2010 ஆம் ஆண்டு வெளியான நீதானா அவன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து அவர் சொந்தமாக தயாரித்த லத்திகா படம் மருத்துவர் சீனிவாசனை, பவர் ஸ்டார் சீனிவாசனாக மாற்றியது. தொடர்ந்து நடிகர் சந்தானத்துடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் சீனிவாசன் நடித்துள்ளார். 


இப்படியான நிலையில், “ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக இறால் பண்ணை அதிபரை ஏமாற்றிய செக்மோசடி வழக்கில் ஆஜராகாததால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து நடவடிக்கை எடுத்துள்ளது. 


ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்தவர் உப்பளம் மற்றும் இறால் பண்ணை அதிபர் முனியசாமி .இவர் தொழில் அபிவிருத்தி செய்வதற்காக ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக  நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார்.  அதற்கு டாக்குமெண்டேஷன் சார்ஜ் ஆக ரூ.14 லட்சம் தர வேண்டும் என்று கூறவும், இறால் பண்ணைஅதிபர் முனியசாமி கேட்ட பணத்தை  2019 ஆம் ஆண்டு வழங்கியிருக்கிறார்.


ஆனால் அவருக்கு கடனும் வாங்கி தரவில்லை. டாக்குமெண்டேஷன் சார்ஜையும் திரும்பத் தரவில்லை.  ரூ.14 லட்சத்திற்கு பவர்ஸ்டார் சீனிவாசன் கொடுத்த செக்  வங்கியில் பணம் இல்லை என்று திரும்ப வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலதிபர் முனியசாமி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.


 இந்த வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இருந்ததால் இன்று ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நிலவேஸ்வரன் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு செக் மோசடி வழக்கில் ஆஜராகாமல் இருந்த குற்றத்திற்காக அவருக்கு பிடிவாரென்று பிறப்பித்து உத்தரவிட்டார். ராமநாதபுரத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மோசடி செய்து செக் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் படிக்க: மிக்ஜாம்: ஒரு மாத ஊதியத்தை அள்ளிக் கொடுத்த முதலமைச்சர்: எம்.எல்.ஏ, எம்.பி.,க்களுக்கு முக்கிய உத்தரவு