தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்  கடந்த சில ஆண்டுகளில் பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளது. பிகில் ,  'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT)', 'லவ் டுடே', சமீபத்தில் வெளியான ப்ளாஸ்ட்  உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களை தயாரித்த இந்த நிறுவனம், மிகப்பெரிய பட்ஜெட் படங்களையும் வணிக ரீதியாக திட்டமிட்டு தயாரிப்பதற்காக அறியப்படுகிறது.

Continues below advertisement

இந்த நிலையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, சமீபத்தில் "சாய் வித் சித்ரா" நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.

ரஜினி படத்தை நிராகரித்தது ஏன்?

நேர்காணலில், "பட்ஜெட் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பணியாற்றும் வாய்ப்பை நீங்கள் தவிர்த்தீர்களா?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அர்ச்சனா கல்பாத்தி, ஒரு திரைப்படத்தில் முதலீடு செய்யும் போது குறைந்தபட்சம் 20 சதவீத லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் என்று கூறினார்.

Continues below advertisement

அவர் மேலும், "ஒரு படத்தில் ரிஸ்க் மிகவும் அதிகம். அந்த ரிஸ்க்கை ஏற்க வேண்டுமென்றால் குறைந்தது 20 சதவீத லாபம் கிடைக்க வேண்டும். பட்ஜெட் கணக்கிடும் நிலையிலேயே அந்த வாய்ப்பு இல்லையெனில் அந்த படத்தை தயாரிக்க மாட்டோம். பணத்தை வங்கியில் முதலீடு செய்தாலும் வட்டி கிடைக்கும். அதுபோல சினிமாவிலும் முதலீட்டிற்கு நியாயமான வருமானம் இருக்க வேண்டும்," என்று விளக்கமளித்தார்.

அர்ச்சனா கல்பாத்தி நேரடியாக ரஜினிகாந்தின் பெயரை குறிப்பிட்டு எந்த திட்டத்தைப் பற்றியும் விரிவாக பேசவில்லை. இருப்பினும், அவரது பதில் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, "சூப்பர் ஸ்டார் படத்திற்குக் கூட லாபக் கணக்கே முதன்மை" என்ற கருத்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் 'GOAT', 'லவ் டுடே', 'பிக்', 'கான்ஜூரிங் கண்ணப்பன்' உள்ளிட்ட வித்தியாசமான பட்ஜெட் மற்றும் வகைமைகளில் படங்களை தயாரித்துள்ளது. சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட லவ் டுடே மிகப்பெரிய லாபத்தை ஈட்டிய நிலையில், பெரிய நட்சத்திரங்களை வைத்து தயாரிக்கப்பட்ட படங்களிலும் வணிக கணக்கை மிக முக்கியமாக பார்க்கும் நிறுவனம் என்ற பெயரை ஏஜிஎஸ் பெற்றுள்ளது.