Aranthangi Nisha: பங்களா வீடு கட்டிட்டேனா? வதந்திகளை நம்பாதீர்.. அறந்தாங்கி நிஷாவின் தெளிவான விளக்கம் 


சமீபத்தில் அறந்தாங்கி நிஷா புதிதாக சென்னையில் ஒரு வீடு வாங்கி விட்டதாகவும், பங்களா வீடு கட்டி குடியேறி விட்டதாகவும் பல வதந்திகள் பறவி வந்தன. அந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அது குறித்த ஒரு விளக்கத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் தன்னம்பிக்கையோடு பதிலளித்துள்ளார் நம்ம அறந்தாங்கி நிஷா. 


தன்னம்பிக்கை தூண் :


விஜய் டிவியில் 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சி மூலம் ஒரு ஸ்டாண்டப் காமெடியனாக தன்னை நிலை நிறுத்தி கொண்டவர் அறந்தாங்கி நிஷா. ஒரு பெண்ணாக இருந்தும் ஆண் போட்டியாளர்களுடன் ஈடு கொடுத்து போட்டி போட்டு மிகவும் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. அவர் ஒரு சிறந்த பேச்சாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது கருப்பான தோற்றத்தையே ஒரு சவாலாக எடுத்து கொண்டு ஜெயித்தவர். தன்னம்பிக்கை இழந்த பெண்களுக்கு அறந்தாங்கி நிஷா ஒரு முன்னுதாரணம். 



பிக் பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பு:


விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தனது விடாமுயற்சியால் சுமார் 70 நாட்கள் வரை தாக்குப்பிடித்து பின்னர் எலிமினேட் செய்யப்பட்டார். அதற்கு பிறகு அறந்தாங்கி நிஷாவிற்கு பல திரைப்பட வாய்ப்புகள் நிகழ்ச்சி தொகுப்பாளர் போன்ற பல வாய்ப்புகள் கிடைத்தன. தொகுப்பாளராக மட்டுமின்றி போட்டியாளராகவும் பங்கேற்று தனது திறமைகளை மேம்படுத்தி வருகிறார். அவருக்கு அவரது கணவர், பெற்றோர் என அனைவரும் உறுதுணை இருக்கிறார்கள். 


பங்களா கட்டிட்டேனா?


பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமும் விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மூலம் நிறைய சம்பாதித்து அறந்தாங்கி நிஷா சென்னையில் பங்களா வீடு வாங்கி விட்டதாக பல வதந்திகள் பரவி வந்தன. அதற்கு எல்லாம் பதில் அளிக்கும் விதமாக நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போஸ்ட் செய்துள்ளார். "அது எப்படிப்பா எனக்கே தெரியாம நான் பங்களா கட்டுவேன், பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்துற மாதிரி சொல்லுங்கப்பா. அந்த பதிவை பாத்துட்டு நிறைய பேர் என்னை வாழ்த்துனாங்க சிலர் கிண்டல் பண்ணாங்க. இது வெறும் வதந்திதான். ஆனா முயற்சி செய்தால் முடியாதது என்று எதுவும் இல்லை. சீக்கிரமே ஒரு பங்களா கட்டுவோம்" என்று மிகவும் தன்னம்பிக்கையோடு ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். 






சென்னையில் ஒரு வாடகை வீடு:


தனது ஷூட்டிங்கிற்காக மட்டுமே சென்னை அடிக்கடி வந்து போவது கடினமாக இருப்பதால் எனது குடும்பத்துடன் சென்னையில் ஒரு வாடகை வீட்டுக்கு குடி வந்துவிட்டோம். ஆனால் இதை பலர் தவறாக புரிந்துகொண்டு வதந்திகளை பரப்பிவிட்டனர். ஆனால் கூடிய விரைவில் நாங்கள் ஒரு பங்களா கட்டுவோம் என்றுள்ளார் அறந்தாங்கி நிஷா.