தமிழ் சினிமா காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட், குடும்பம், திரில்லர், அந்தாலஜி, எண்டர்டெயின்மெண்ட், கமர்சியல் என பலதரப்பட்ட திரைப்படங்களை பல்வேறு காலகட்டங்களில் கடந்து வந்துள்ளது. எல்லா நேரத்திலும் ரசிகர்கள் ஒரே மாதிரியான கதைகளை ரசிப்பதில்லை. அவர்களுக்கு வித்தியாசம் தேவைப்படுகிறது. ஒரு சில நேரத்தில் ஆக்ஷன் படங்களை கொண்டாடும் ரசிகர்கள் அமைதியான காதல் கதை கொண்ட படங்களையும் விரும்புகிறார்கள். இன்றைய சினிமா உலகம் கமர்சியல் மயமாகி வருவதால் பெரும்பாலான திரைப்படங்கள் கமர்சியல் நோக்கத்திலேயே வெளியாகின்றன. ஒரு காலகட்டத்தில் அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைப்பதால் மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. அதனால் அவர்கள் கவனம் வேறு பக்கம் திரும்புகிறது.


 




அந்த வகையில் தற்போது மக்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட இயக்குனர் ஃபேன்டஸி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இது மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அப்படி 2003ம் ஆண்டு வெளியான ஒரு நகைச்சுவை கலந்த என்டர்டெயின்மென்ட் திரைப்படம் தான் 'அறை எண் 305-ல் கடவுள்'. இப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. நடிகர் சந்தானம், கஞ்சா கருப்பு, பிரகாஷ்ராஜ், ராஜேஷ், இளவரசு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். 23ம் புலிகேசி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இப்படம் ஒரு படைப்பாளியின் கற்பனையை வெளிக்காட்டிய ஒரு திரைப்படம். 


மனிதனின் புலம்பல் கடவுளுக்கு கேட்டு அவரே நேரடியாக பூமிக்கு வந்தால் என இயக்குனரின் கற்பனை தான் படத்தின் திரைக்கதை. சாமானியர்களாக சந்தானம் மற்றும் கஞ்சா கருப்பு நடிக்க கடவுளாக பிரகாஷ்ராஜ் கலக்கிய திரைப்படம். படம் வெளியான சமயத்தில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. வெளியான சமயத்தில் பெரும்பாலானவர்களுக்கு இக்கதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தாலும் பலர் இயக்குனரின் சிந்தனையை பாராட்டினார். கடவுள் மனிதனை திருத்தி நல்வழி படுத்த நினைத்தால் அவரின் இருந்தே கேலக்ஸி பாக்ஸை திருடி கடவுளை சாதாரண ஒரு மானிடனாக மாற்றுகிறார்கள் கடவுள் சக்தி பெற்ற மனிதர்கள். பவர் கையில் வந்ததும் மனிதன் ஆடும் ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. 


 



ஒரு வழியாக பல கைகளில் சிக்கும் கேலக்ஸி பாக்ஸ் கடவுளிடம் திரும்ப கிடைத்ததும் மனித வாழ்க்கை போதுமடா சாமி என மீண்டும் தன்னுடைய உலகத்திற்கே திரும்புகிறார் கடவுள். மீண்டும் வேறு இரு மனிதர்கள் அழைக்க மீண்டும் பூமி வருகிறார் கடவுள் ஆனால் இந்த முறை கேலக்ஸி பாக்ஸை படு பத்திரமாக சேஃப்டி லாக்கரில் எடுத்து வருகிறார் என்பதோடு முடிவுக்கு வருகிறது படம். கடவுளுக்கே பாடம் கற்பித்த மனித இனத்தை பாராட்டியே ஆக வேண்டும்.


படத்தின் திரைக்கதையில் ஒரு சில சறுக்கல்கள், சொதப்பல்கள் இருப்பினும் ஸ்வாரசிஸ்யமான ஒரு திரைக்கதையை வைத்து சிறந்த ஒரு எண்டர்டெயின்மெண்ட் படமாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குனர் சிம்புதேவன். படத்தின் ஹைலைட்டாக மனதை கொள்ளை கொண்டவர் கடவுளாக நடித்த பிரகாஷ்ராஜ். படமென்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்பதை நிரூபித்து காட்டிய 'அறை எண் 305-ல் கடவுள்' 15 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி பார்க்க வைக்கிறது.