திருவண்ணாமலையில் ஆசிரமம் போட்டு அமர்ந்திருக்கும் அன்னபூரணி அரசு அம்மா, கடந்த சுதந்திர தினத்தன்று அம்மன் வடிவில் அலங்காரம் செய்து, அருளாசி வழங்கியது, சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. பிரபல சேனல்கள் வழக்கம் போல அவரை கிண்டலடித்து அந்த செய்தியை ஒளிபரப்பினர். இதனால் ஆத்திரமடைந்த அன்னபூரணி, மறுநாள் காரசாரமான வீடியோ அறிக்கையை வெளியிட்டு, தனது ஆசிரமத்திற்கு நுழைய சேனல் ஒன்றுக்கு தடை விதித்தார். மேலும் தன்னை இழிவுபடுத்தும் யூடியூப் சேனல்களையும் கடுமையாக சாடினார். இந்நிலையில், ஏன் தான் அவ்வாறு பேசினேன் என விளக்கம் அளித்து சற்று முன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அன்னபூரணி. இதோ அதில் அவர் பேசியுள்ளதாவது: 


 


‛‛மக்களுக்கு சில விசயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதாவது, என்னுடைய ஆன்மிகம் கார்ப்ரேட் ஆன்மிகம் கிடையாது. என்னுடைய ஆன்மிகம் உண்மையாக ஆன்மிகம். உண்மையான ஆன்மிக தளம். இப்போ மட்டுமல்ல,எப்போதும் என்னுடைய ஆன்மிகம் கார்ப்ரேட் ஆன்மிகமாக மாறாது. மாற்றவும் மாட்டேன்.


அப்படி மாற்றாததால் தான் இவ்வளவு எதிர்ப்புகளை நான் சந்தித்து வருகிறேன். இதுமட்டுமல்ல இன்னும் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், சத்தியம் என்ன உணர்த்துதோ, அந்த சத்தியத்திற்கு மட்டும் தான் நான் கட்டுப்படுவேன். இந்த ஆணவ கூட்டத்திற்கு கட்டுப்பட மாட்டேன். சத்தியத்தை ஒருகாலும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் .சத்தியம் என்பது சிலருக்கு புரியாது. சத்தியம் என்பது இறைவன், இயற்கை, இயற்கை சக்தி, இறை தன்னை, பிரபஞ்சம், பிரபஞ்ச சக்தி இப்படி இன்னும் நிறைய பெயர்களை கூறலாம்.



இதை தான் நான் சத்தியம் என்கிறேன். சமுதாயத்தில் ஒரு பெண் எந்த துறையில் வந்தாலும், அந்த சமுதாயம் அந்த பெண்ணை வளர விடாது. அவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து, தவறாக தான் சித்தரிக்கிறார்கள். இயற்கை தாயிடமும் அப்படி தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இயற்கையிடம் அப்படியெல்லாம் ஒரு காலும் செயல்பட முடியாது. எதற்காகவும் இந்த இயற்கையை தடுத்து நிறுத்த முடியாது. 


தாயோட உணர்வுக்கு அர்த்தம் தெரியாத கேவலமான ஜென்மங்களுக்கான தளம் இது கிடையாது. என்னுடைய ஆன்மிகம் தளம் அவர்களுக்கானது அல்ல. என்னை தேடி வரும் மக்களின் குறைகளை தீர்க்கவும், உண்மையான ஆன்மிக தாகம் உள்ளவர்களுக்கும், அவர்களுக்குள் இருக்கும் இறைத்தன்மையை உணர்த்தி, அதில் நிலை பெற வைப்பதற்கு தான் இயற்கை என் மூலம் செயல்படுகிறது. 



இயற்கை அன்பானது தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. இதமான தென்றல் காற்றை கொடுக்கும் இயற்கை தான் புயலையும் கொடுக்கிறது. அதே தான், என்னை தேடி வரும் என்னுடைய குழந்தைகளிடம் அன்பு உணர்வாக மட்டும் தான் வெளிப்படுவேன். அதே, இந்த சமுதாயத்தில் ஆணவமாக செயல்படுபவர்களிடம் ஆக்ரோஷமாக தான் வெளிப்படுவேன்,’’
என்று அன்னபூரணி அரசு அம்மா தனது வீடியோ அறிக்கையில் கூறியுள்ளார்.