கொரட்டாலா சிவா இயக்கத்தில் டோலிவுட் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தேவாரா'. இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இப்படத்தினை என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இப்படத்தை நந்தமுரி கல்யாண் ராம் வழங்குகிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஹீரோயினாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகும் இப்படத்தில் மற்றுமொரு பாலிவுட் நடிகரான சைஃப் அலி கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 


 

 

அனிருத் இசைமைத்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'ஃபியர் சாங்' வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து இப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான 'பத்தவைக்கும் பார்வைக்காரா...' பாடல் நேற்று முன் தினம் வெளியானது. இதில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் கெமிஸ்ட்ரி  ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. பாடல் விசுவல் ட்ரீட்டாக அமைந்து இருந்தாலும் அனிருத்தின் இசை பெரும் சர்ச்சையில் சிக்கி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

 

 

தேவாரா படத்தின் 'பத்தவைக்கும் பார்வைக்காரா...' பாடல் ஏற்கனவே ட்ரெண்டிங்கில் இருந்த ஸ்ரீலங்கன் பாடலான 'மனிக்கே மஹே...' என்ற பாடலின் டியூனை காப்பியடித்து உருவாக்க பட்டுள்ளது என நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் இரண்டு பாடல்களையும் கம்பேர் செய்து விமர்சித்து  வருகிறார்கள்.

 

 

கோலிவுட் சினிமாவின் நம்பர் ஒன் இசையமைப்பாளர் என்ற இடத்தில் இருக்கும் அனிருத் அடிக்கடி காப்பிகேட் சர்ச்சையில் சிக்குவது என்பது அவ்வப்போது நடக்கும் ஒன்றுதான். அந்த வகையில் இந்த முறையும் காப்பி அடித்து வசமாக சிக்கிக்கொண்டார் அனிருத் என ரசிகர்கள் பங்கப்படுத்தி விமர்சனம் செய்து வருகிறார்கள்.
  

 

 





 

 

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகிலும் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வரும் அனிருத் மிகவும் பிஸியாக அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்த வகையில் அவரின் லைன் அப்பில் வரிசையாக சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் மற்றும் கூலி, விஜய்  தேவரகொண்டாவின் புதிய படம் ஒன்றுக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்திற்கு அனிருத் இசை எடுபடவில்லை என விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

ஜூனியர் என்.டி.ஆரின் 'தேவாரா :பார்ட் 1' செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியன் படமாக வெளியாக இருக்கும் இந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், பிரகாஷ்ராஜ், நரேன், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.