"இருண்ட ஆட்சி நடத்தியவர் இனியாவது காழ்ப்புணர்வு அறிக்கைகளை நிறுத்தட்டும். முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழனாகப் பெருமை கொள்ளட்டும்" என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.


இபிஎஸ்-க்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அன்னிய முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சிக் குறித்த ஆதாரமற்ற, அடிப்படைப் புரிதல் இல்லாத, உள்நோக்கம் கொண்ட அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் நேற்று வெளியிட்டிருக்கிறார்.


முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் வரலாறு காணாத தொழில் வளர்ச்சியை தமிழகம் கண்டு வரும் நிலையில், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மீது உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், தமிழகத்தின் பெருமைகளை உலகத்திற்குப் பறைசாற்றும் வேலையை எதிர்க்கட்சித்தலைவர் செய்திருக்க வேண்டும்.


மாறாக, நமது தொழில்முனைவோர்களையும், அயராமல் உழைத்து வரும் நமது தொழிலாளர்களையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும், கட்சியில் தனது தற்காலிக பொதுச்செயலாளர் பொறுப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் மத்திய பா.ஜ.க.வின் குரலில் பேசி, தமிழர்களின் உண்மையான வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர் என்பதை நிரூபித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.


"10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்த தமிழ்நாடு"


"சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தை" சற்று கீழே வைத்துவிட்டு, பின்வரும் தகவல்களை அவரால் இயன்ற அளவுக்குப் புரிந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


2023-24ஆம் ஆண்டு ஒட்டமொத்த இந்தியாவிலும் அன்னிய முதலீடு குறைந்தபோதிலும், தமிழ்நாட்டில் 12.3% முதலீடுகள் அதிகரித்திருக்கின்றன. எனினும், நேரடி அன்னிய முதலீடுகள் வளர்ச்சிக்கான முழுமையான குறியீடு இல்லை என்பதை தொடர்ந்து பல்வேறு நேரத்தில் பல்வேறு நிபுணர்களும், தொழில்துறை அமைச்சர் என்று முறையில் நானும், நமக்கு மிக அதிகமான முதலீடுகள் வந்தபோதிலும் கூறியிருக்கிறோம்.


இதற்கு காரணம், நிறுவனங்கள் தனது முதலீடுகளை ஒரு மாநிலத்திற்கு கொண்டு வந்து சேர்த்தாலும், அந்தக் கணக்கு அதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ள மாநிலத்தின் பெயரில் சென்றுவிடுகின்றன. எனவே, இதனை நிபுணர்கள் சரியானக் குறியீடாகக் கருதுவதில்லை.


இருப்பினும், கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டிற்கு 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை உறுதி செய்து, 31 இலட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கிரகிக்க முயற்சிக்க வேண்டும்.


தான் சமீபத்தில் படித்த புத்தகத்தை உள்ளே வைத்துவிட்டு, தலைப்பை மறந்துவிட்டேன் என்று சொன்னதுபோல, அரசியல் விபத்தில் முதலமைச்சராகவும் இருந்த எதிர்க்கட்சித்தலைவர், தனது ஆட்சிக்காலத்தில் நாங்குநேரியிலும் ஒசூரிலும் செமிகண்டக்டர் பூங்காக்களை அமைத்தோம் என்ற பொய் மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்.


சட்டமன்றத்தில் நான் 2016ஆம் ஆண்டு மின்வாகனக் கொள்கை (E-Vehicle Policy) பற்றி பேசியபோது E-Way bill குறித்து பதிலளித்த உங்கள் கோஷ்டிக்கு, செமிகண்டக்டர் குறித்த புரிதல் இல்லாமல் போனதில் ஆச்சரியமில்லை. செமிகண்டக்டர் குறித்து இவ்வளவு அக்கறை காட்டும் தாங்கள், தங்களுடைய ஆட்சியில் ஒரு வரைவுக் கொள்கையைக் கூட வெளியிடவில்லை.


2024 ஜனவரி 7,8 ஆகிய நாட்களில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்தான் தமிழகத்திற்கான குறைக் கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுக் கொள்கையை (Semi conductor and Advanced Electronics Policy) உருவாக்கி வெளியிட்டார்.


ஸ்டாலின் ஆட்சியில் மீண்டும் தலை நிமிர்ந்து கம்பீர நடை போட்டுக்கொண்டிருக்கும் தமிழ்நாடு, வெகுவிரைவில் 1 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை எட்டுவது நிச்சயம். இனியேனும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கைகள் விடுவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியைப் பார்த்து ஒரு தமிழனாகத் தாங்களும் பெருமை கொள்ளுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.