சமந்தாவின் நடிப்பில் உருவாகியுள்ள காதல் படமான ‘சாகுந்தலம்’ அடுத்த மாதம் ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் குறித்த சுவாரஸ்யமான புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ளார்.


மயோசிடிஸ் பாதிப்பில் இருந்து ஒருபுறம் மீண்டு வரும் கையுடன், கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகையாக தொடர்ந்து கோலோச்சி வருகிறார் நடிகை சமந்தா.


அந்த வகையில் ‘காளிதாஸ்’ எழுதிய புராணக்கதையான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார் சமந்தா. ’சூஃபியும் சுஜாதையும்’ படத்தில் நடித்து கவனமீர்த்த தேவ் மோகன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், பிரபல தெலுங்கு இயக்குநரான குணசேகரன் படத்தை இயக்கியுள்ளார்.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் பிப்.17ஆம் தேதி ரிலீசாக உள்ளது.


இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகளில் தான் முழுவீச்சில் ஈடுபடும் புகைப்படத்தை முன்னதாக சமந்தா பகிர்ந்துள்ளார். ”இந்த பைத்தியக்காரத்தனம், துக்கம், இழப்பு என அனைத்துக்கும் கலை தான் சிகிச்சை. அதன் மூலம் நான் குணம்பெற்று வீட்டுக்கு செல்வேன்” எனப் பதிவிட்டுள்ளார் சமந்தா.






சாகுந்தலம் படத்தில் அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், கௌதமி, மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.


விஜய் தேவரகொண்டாவுடன் குஷி, ஆங்கிலப் படமான ’அரேஞ்மெண்ட் ஆஃப் லவ்’, வெப் சீரிஸ் ’சிட்டடல்’ என அடுத்தடுத்த ப்ராஜக்ட்களில் சமந்தா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.