நடிகை அமலா பால் சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். மேலும் அவர் தனது அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். 


மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் நடிகை அமலாபால் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் மலையாள திரையுலகை திருப்பி போட்ட ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமலாபால், விரிவாக கருத்து தெரிவிப்பதைத் தவிர்த்தாலும்,  ஆழ்ந்த மன உளைச்சலை ஒப்புக்கொண்டார். 


அப்போது பேசிய அவர், “ஹேமா கமிட்டி அறிக்கையில் இருந்து மிகவும் கவலையளிக்கும் மற்றும் அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் வெளிவந்தன. இதற்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 


மேலும், அவர் கூறுகையில், “இந்த அறிக்கையை மக்களிடம் சேர்க்க அயராது உழைத்த குழு ஒன்று உள்ளது. இந்த முயற்சியில் அவர்கள் தனியாக இல்லை. அவர்களுக்கு சட்டம் உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருந்தது. 


இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டவை அனைத்தும் புறக்கணிக்கப்படாது என்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாகவும்” தெரிவித்தார்.