தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜூன். இவர் நடித்த புஷ்பா படம் கடந்த 2021ம் ஆண்டு வெளியானது. செம்மரக் கடத்தலை மையமாக கொண்டு உருவான இந்த படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.



ரூபாய் 900 கோடி லாபம்:


இந்த படம் முடியும்போதே இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான தொடக்கத்துடன் முடிக்கப்பட்டிருக்கும். நீண்ட நாட்களாகவே படப்பிடிப்பிலே இருந்த புஷ்பா 2 படம் வரும் டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான சுகுமார் இயக்கியுள்ள இந்த படம் வெளியீட்டிற்கு முன்பே 900 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டு முன்னணி ஓடிடி தளங்களுக்கான வெளியீட்டு உரிமைகள் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் மூலமாக இந்த லாபம் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓடிடி உரிமை:


புஷ்பா 2 படத்திற்கான ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸில் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதன் மதிப்பு மட்டும் ரூபாய் 270 கோடி ரூபாய் அளவிற்கு என்று கூறப்படுகிறது.


புஷ்பா படம் திரையரங்கில் வெளியிடுவதற்கான வர்த்தகம் மட்டும் தற்போது வரை ரூபாய் 650 கோடி வரை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூபாய் 500 கோடி பட்ஜெட்டில் புஷ்பா 2 படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி: 


அல்லு அர்ஜூன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். பகத் ஃபாசில் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் வெளியிடுகின்றனர்.


படம் வௌியீட்டிற்கு முன்னே ரூபாய் 900 கோடி வரை வர்த்தகம் நடைபெற்று இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அல்லு அர்ஜூன் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புஷ்பா படத்தில் நடிகை சமந்தா நடனம் ஆடிய ம்ம்ம் சொல்றியா பாடல் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.


ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், சுனில், அஜய் கோஷ், தனஞ்ஜெயா, அஜய், ஸ்ரீதேஜ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.