உலக அழகி பட்டம் பெற்ற கையுடன் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி, பாலிவுட்டில் கோலோச்சி இந்திய முகமாக உலக அரங்கில் கொண்டாடப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் (Aishwarya Rai).  கடந்த 2002ஆம் ஆண்டு தொடங்கி நடிகை ஐஸ்வர்யா ராய் உலகின் மதிப்புமிக்க சினிமா விருது விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழாவில் தொடர்ந்து பங்குபெற்று வருகிறார். 


அந்த வகையில் இந்த ஆண்டு கேன்ஸ் விழா பிரெஞ்சு ரிவியரா எனும் இடத்தில் நடைபெறும் நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் நேற்று தன் மகள் ஆராத்யாவுடன் விழாவில் பங்குபெற மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.  இந்நிலையில் கையில் கட்டுடன் ஐஸ்வர்யா ராய் மும்பை விமான நிலையத்தில் புகைப்பட பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்து விட்டுச் சென்றது பாலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.


கையில் கட்டுடன் சோர்வாக வந்த ஐஸ்வர்யா ராய்க்கு எப்படி அடிபட்டது என்பது பற்றி தெரியாமல் ரசிகர்கள் ஒருபுறம் கவலை தெரிவித்து வரும் நிலையில், தன் தொழிலில் ஐஸ்வர்யா ராய் எத்தனை சின்சியராக இருக்கிறார் என மற்றொருபுறம் ரசிகர்கள் கருத்துகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


கேன்ஸ் திரைப்பட விழா இந்த ஆண்டு கடந்த மே 14ஆம் தேதி தொடங்கி வரும் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.