பிரபல இந்தி நடிகை வீணா கபூர் தனது சொந்த மகனால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


‘மிட்டர் பியாரே நு ஹால் முரீடன் டா கெஹ்னா', 'டல்: தி கேங்' மற்றும் 'பந்தன் பெரோன் கே' ஆகிய இந்தி படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் பழம் பெரும் நடிகை வீணா கபூர். இவர் பிரிட்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி  அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. 74 வயதான அவர் மகாராஷ்ட்ரா மாநிலம் ஜூஹுவில் உள்ள கல்பதரு சொசைட்டியில் வசித்து வந்தார்.


இதனிடையே இவரது மூத்த மகன் சச்சின் கபூர் கடந்த சில மாதங்களாக வேலையில்லாமல் இருந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு தான்தனது வீட்டை காலி செய்துவிட்டு வீணா வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார். வீணாவின் 2வது மகன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் வீணாவுக்கு போன் செய்த நிலையில், வீட்டில் யாரும் போன் எடுக்காத நிலையில், ஜூஹூ காவல் நிலையத்தில் தாயை காணவில்லை என புகாரளித்தார். 






இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வீணா கபூர்  வீட்டுக்கு சென்று பார்த்த போது, அவர் கொலை செய்யப்பட்டது  தெரிய வந்தது. இதுதொடர்பாக  வீணா கபூரின் மூத்த மகன் சச்சின், வீட்டு பணியாள்  சோட்டு என்ற லாலு குமார் மண்டல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், சொத்து தகராறில் வீணா கபூர் அடித்து கொல்லப்பட்டார் என்பது தெரிய வந்துள்ளது. 


பல கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பாக சச்சின் தனது தாய் வீணாவுடன் தகராறு செய்து வந்ததாகவும்,  இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பேஸ்பால் மட்டையால் அவரை அடித்து கொன்றதோடு மட்டுமல்லாமல், உடலை வீட்டிலிருந்து 90 கிமீ தொலைவில் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் வீசியதும் தெரிய வந்தது.


வீணா கபூர் கொல்லப்பட்ட செய்தியை நடிகை நீலு கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், உண்மையில் வார்த்தைகளை இழந்துவிட்டேனே, பல வருட போராட்டத்திற்கு பிறகு நீங்கள் இறுதியாக நிம்மதியாக ஓய்வெடுப்பீர்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.