சேலம் மாவட்ட அ.தி.மு.க. ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்த   ஏ.வி.ராஜூ கடந்த சில வாரம்  முன்னர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அவர் செய்தியாளர் சந்திப்பின் போது சேலம் மாவட்ட அதிமுகவினரையும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்து பேசினார். அதில் 2017 ஆம் ஆண்டு கூவத்தூரில் நடைபெற்ற சம்பவங்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது நடிகை திரிஷாவை பற்றி ஆதாரமில்லாமல் அருவருக்கத்தக்க வகையில் கருத்துகளையும் தெரிவித்தார். மேலும் நடிகர் கருணாஸ் மற்றும் திரைத்துறையினர் பெயர் குறிப்பிடாமல்  சில நடிகைகள் என்றும் பேசியிருந்தார். 


இது தொடர்பாக பலரும் கண்டனங்களையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது கருத்தினை கோவையில் செய்தியாளர்களைச் சந்திக்கையில் கூறினார்.  அப்போது அவர், ”கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் நடிகை திரிஷாவை  தவறாக பேசி வருவது கண்டிக்கதக்கது. திரிஷாவை தவறாக பேசியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கூறினார். 


இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஏ.வி.ராஜூ தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். தான் திரிஷா பெயரை சொல்லவில்லை என்றும், அவரை மாதிரி என குறிப்பிட அப்படி சொன்னதாகவும் என மழுப்பலான விளக்கம் கொடுத்தார். 


இது தொடர்பாக நடிகை திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில், ”தன்னை பற்றிய அவதூறு தகவல்களுக்கு 24 மணி நேரத்துக்குள் பிரபல ஊடக நிறுவனங்கள் வாயிலாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.  ஏ.வி.ராஜூ  வீடியோ எந்தந்த தளங்களில் வெளியானதோ அதனை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அதில் ஒரு குறிப்பிட்ட ஒரு தொகை மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 4 நாட்களுக்குள் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். இல்லாவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்”  என தெரிவித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை பகிர்ந்துள்ளார். 


இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சங்கத் தலைவர் நாசர், “தற்போது பொது வலைதளங்களில் சகோதரி திரிஷா, சகோதரர் கருணாஸ். குறித்து கேட்பதற்கு கூசுகின்ற ,ஆதாரமற்ற, பொறுப்பற்ற, தரமற்ற, கீழ்தரமான, வக்கிரமனப்பான்மையோடு, பரவ விடப்பட்டிருக்கும்  பொய்கதையை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.  திரைத்துறையை சார்ந்த பிரபலங்களை பற்றி பொதுவெளியில் அவதூறு பரப்பி சுய விளம்பரம் தேடிக் கொள்ளும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனர். எல்லோரும் வெட்கித் தலைகுனியும்படி மீண்டும் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. திரையிலும் பொதுவெளியிலும் இயங்கி வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான நடிகர் கருணாஸ் மீதும் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் முன்னணி நடிகையாக திகழும் திரிஷா மீதும் இப்படி அபாண்டமான அவதூறை அதுவும் பொது வாழ்க்கையில் இருக்கும் நபரே தனது அரசியல் சுயலாபத்துக்காக பரப்புவது வேதனை அளிக்கிறது” என கருத்து தெரிவித்துள்ளார்.