நடிகை டாப்சி புகைப்படக் கலைஞர்களிடம் கோபப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


பாப்பராசி கலாச்சாரம்


பிரபலங்களைப் பற்றி தெரிந்து கொள்ள அவர்களை விடாமல் பின் தொடரும் புகைப்படக்காரர்கள் பாப்பராசிக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.


 ஹாலிவுட்டில் இந்த பாப்பராசி கலாச்சாரம் மிகவும் சாதாரண ஒன்றாகத் திகழ்ந்தாலும், இந்தியாவில் பாலிவுட்டில் தான் அதிகம் காணப்படுகிறது. மும்பை விமான நிலையத்துக்கு வருகை தரும் பிரபலங்களை பின்தொடரும் புகைப்படக்காரர்களை வைத்து இதை நம்மால் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.


அந்த வகையில் முன்னதாக தன்னை பின் தொடர்ந்த புகைப்படக் கலைஞர்களிடம் கடுப்படித்த நடிகை டாப்சியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


கொந்தளித்த டாப்சி!


இந்த வீடியோவில் நடிகை டாப்சி தனது காருக்குள் நுழைய முற்படுகையில் அவருக்கு இடையூறாக நின்ற புகைப்படக்காரர்களிடம் இப்படி செய்யாதீர்கள் என தொடர்ந்து வலியுறுத்துகிறார்.


மேலும், ”என்னை இப்படி தாக்கி விட்டு, பின் அவர் அப்படி கத்தினார் என்று எழுதுவீர்கள்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.


இடையே தனக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த புகைப்படக்காரர்களிடம் தனது வாழ்த்தையும் பகிரும் டாப்சிக்கு  இடையூறாக புகைப்படக் கலைஞர்கள் தொடர்ந்து நிற்கும் நிலையில், ’இப்படி செய்யாதீர்கள்’ என கண்டிப்பான குரலில் தெரிவித்து விட்டு பின் காரில் ஏறிச்சென்று விடுகிறார்.


அடுத்த ஜெயா பச்சன்!


 






டாப்சி தனது கோபத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தும் இந்த வீடியோ இணையத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.


டாப்சி நடிகை ஜெயா பச்சனைப் போல் கோபப்படுகிறார் என ஒரு தரப்பினரும், பாப்பராசிக்களின் நடவடிக்கை பிடிக்காததால் தான் டாப்சி இப்படி நடந்து கொள்கிறார் என அவருக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


முன்னதாக ’டொபாரா’ பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்ற டாப்சிக்கும் பாப்பராசி புகைபடக்கலைஞர்களுக்கும்  மோதல் வெடித்தது.


ஏற்கெனவே வெடித்த மோதல்


இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் டோபாரா பட நிகழ்ச்சிக்காக வேகவேகமாகச் சென்ற டாப்சியிடம் போட்டோகிராபர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்படி கோரினர். ஆனால் டாப்சி நேராக விழா நடைபெறும் இடத்துக்கு வேகமாக சென்றார்.


இதனால் கோபமடைந்த புகைப்படக்கலைஞர்கள் ''நீங்கள் மிகவும் லேட்டாக வருகிறீர்கள். நாங்கள் 2 மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்கிறோம்'' என்றனர். அதற்கு பதிலளிக்க முயன்ற டாப்சி தன்னுடைய நியாயத்தை எடுத்துக்கூறினார்.


பின்னர் புகைப்படக் கலைஞர்கள் பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபமாக பேசிய டாப்சி, “என்னை என்ன செய்யச்சொன்னார்களோ அதைத்தான் நான் செய்கிறேன். என்னிடம் ஏன் கத்துகிறீர்கள்? நான் என்னுடைய வேலையைத்தான் பார்க்கிறேன்.


நான் எல்லா இடத்துக்குமே சரியான நேரத்துக்கு செல்கிறேன். என்னிடம் மரியாதையாக பேசுங்கள். நான் உங்களிடம் மரியாதையாக பேசுவேன். எப்போதும் நீங்கள்தான் சரி. நடிகர்கள்தான் தவறு என நினைக்கிறீர்கள்” என வாதிட்டார். இந்த வாக்குவாதம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.