நடிகர் விஜய்யுடன் பணிபுரியும் வாய்ப்பு வந்தால் தவறவிட மாட்டேன் என நடிகர் ஸ்ரீமன் தெரிவித்துள்ளார். 


தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. விஜய்யின் 66வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. குடும்ப கதையாகி உருவாகி வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தெலுங்கின் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கிறார். 






விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 3 போஸ்டர்கள் வெளியான நிலையில் அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்களும், வீடியோக்களும் திருட்டுத்தனமாக வெளியானது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் செல்போன்கள் பயன்படுத்த இயக்குநர் வம்சி அதிரடியாக தடை விதித்தார். ஆனாலும் அது எல்லாமே வீண் என்பது போல மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது. 






மேலும் வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளி தினத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இனி தொடர்ந்து பட அப்டேட் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் வாரிசு படத்தில் தானும் நடித்துள்ளதாக நடிகர் ஸ்ரீமன் தெரிவித்துள்ளார். இயக்குனர் வம்சியுடன்  இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, தளபதியுடன் பணிபுரியும் வாய்ப்பு எப்போது கிடைத்தாலும் நான் தவறவிடமாட்டேன். தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குநர் வம்சி ஆகியோருக்கு நன்றி. ஆரூயிர் விஜிமா (விஜய்) உன் ஆதரவை என்னால் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.