தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தேவாரா. ஆர்.ஆர்.ஆர். படம் மூலமாக இந்தியா முழுவதும் ஜூனியர் என்.டி.ஆர். பிரபலம் ஆகியுள்ளார். இதனால், தேவாரா படத்தின் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.


ஸ்ரீதேவியின் மகள்:


இந்த படத்தில் நாயகியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் கொடிகட்டிப் பறந்த மறைந்த ஸ்ரீதேவியின் மகள் இவர் என்பதால் இவர் அறிமுகமானது முதலே இவருக்கு ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இவர் தமிழில் இதுவரை எந்த படத்திலும் நடிக்கவில்லை.






தேவாரா படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் வெளியாகிறது. சென்னையில் நடைபெற்ற தேவாரா ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.  இயக்குனர் கொரட்டலா சிவா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருடன் நடிகை ஜான்வி கபூரும் பங்கேற்றார்.

தமிழ் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ஜான்வி கபூர்:


நிகழ்ச்சியில் ஜான்வி கபூர் பேசியதாவது, “சென்னை எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். சென்னை என்றாலே அம்மாவுடன் இருந்த பல நியாபகங்கள் இருக்கு. நீங்க அவங்க மேல காட்டுன அன்புதான் நானும், என் குடும்பமும் இன்னைக்கு இந்த நிலைமையில இருக்குறதுக்கு காரணம். அம்மாவுக்கு கொடுத்த அன்பை எனக்கும் தருவீர்கள் என நம்புகிறேன். அதுக்கு நான் எப்பவுமே உங்களுக்கு கடைமைப்பட்டுருக்கேன். அந்த அளவுக்கு கடினமான உழைப்பையும் கொடுப்பேன். ‘தேவரா’ எனக்கு ஸ்பெஷல் படம். உங்களுக்கும் பிடிக்கும்”.


என்று பேசினார்.


ஜான்வி கபூருடன் நடித்த அனுபவம் பற்றி படத்தின் நாயகன் ஜூனியர் என்.டி.ஆர். பேசியதாவது.  ஜான்வியின் சிறப்பான நடிப்பு உங்களுக்குப் பிடிக்கும் என்று பாராட்டினார்.


கொடிகட்டிப் பறந்த ஸ்ரீதேவி:


ஜான்வி கபூரின் தாயார் ஸ்ரீதேவி தமிழின் உச்சநட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கிலும் கொடிகட்டிப் பறந்தவர் பாலிவுட்டிற்குச் சென்ற பிறகு போனி கபூரைத் திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீதேவி கடைசியாக தமிழில் விஜய் நடித்த புலி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


27 வயதான ஜான்வி கபூர் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். இதுவரை பாலிவுட்டில் மட்டுமே நடித்து வந்த அவர் முதன்முறையாக தேவாரா படம் மூலமாக தென்னிந்திய மொழிக்கு அறிமுகமாகியுள்ளார். விரைவில் அவரை தமிழ் திரையுலகிலும் நடிகையாக பார்க்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.