திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன் என வளர்ந்து வரும் நடிகையான ஷீலா ராஜ்குமார் அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் வெளியான ‘ஆறாது சினம்’ படத்தின் மூலம் சினிமாவில் ஷீலா ராஜ்குமார் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அசுரவதம், நம்ம வீட்டுப்பிள்ளை மற்றும் மலையாளத்தில் சில படங்களில் நடித்தார். ஆனால் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற அழகிய தமிழ் மகள் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்த பின்னரே ஷீலா அனைவரிடத்திலும் பிரபலமாக தொடங்கினார். 


இதற்கிடையில் தான் 2020 ஆம் ஆண்டு வெளியான திரௌபதி படத்தில் இவர் ஹீரோயினாக நடித்திருந்தார். நாடகக் காதலை மையப்படுத்தி மோகன் ஜி இயக்கிய இந்த படம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இந்த படம் முடிந்த அடுத்த சில மாதங்களில் நடுக்கடலில் வைத்து தனது காதலனை திருமணம் செய்துக் கொண்டார் ஷீலா. இதன் புகைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது. மேலும் நேர்காணல் ஒன்றில் திரௌபதி படத்தில் நடித்தது தன் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தப்பு என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 






இப்படியான நிலையில் ஷீலா ராஜ்குமார் நாளைய இயக்குநரில் பங்கேற்ற தமிழ் சோழன் என்பவரை தான் ஷீலா திருமணம் செய்திருந்தார். குறும்படத்தில் பணியாற்றிய போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும், பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காததால் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொண்டது மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. இதனைத் தொடர்ந்து இவர் நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியான டூலெட், 2022 ஆம் ஆண்டு வெளியான மண்டேலா ஆகிய படங்கள் விருதுகளை குவித்தது. தொடர்ந்து ஜோதி, பிச்சைக்காரன் 2, நூடுல்ஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் என தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார் ஷீலா. 


இந்நிலையில் திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன் என ஷீலா ராஜ்குமார் அறிவித்துள்ளார். அதில் என்ன காரணம் என குறிப்பிடவில்லை. மேலும் தம்பி சோழனை குறிப்பிட்டு நன்றியும் அன்பும் என தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து திரையுலகில் திருமணமான தம்பதியினர் பிரிந்து வருவது அவர்களுடைய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.