குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஷகீலாவை நிகழ்ச்சியில் கோமாளிகளாக இருந்த புகழ், குரேஷி மற்றும் பலர் மம்மி என்று அழைக்க துவங்கியதால் அவர் ரசிகர்களும் மம்மி என செல்லமாக அழைக்க துவங்கினார்கள். கிளாமர் நடிகை என்ற அவரின் அடையாளம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு தான் மாறியது. 


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் துணை நடிகையாக, நகைச்சுவை நடிகையாக 110க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்தார். மலையாளத்தில் நடிகை சில்க் ஸ்மிதா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த 'கால் கேள்ஸ்' என்ற திரைப்படத்தின் துணை நடிகையாக அறிமுகமானார் நடிகை ஷகீலா. அவர் சினிமாவில் அறிமுகமாகும் போது அவருக்கு வயது 15. அடல்ட் படத்தில் அறிமுகமானதாலே அவர் அடல்ட் நடிகை என அடையாளப்படுத்தப்பட்டார். தன்னுடைய குடும்ப சூழல் தான் அவரை அந்த வயதில் அப்படி ஒரு படத்தில் நடிக்க காரணமாக அமைந்தது. அதற்கு பிறகு அவர் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அவரின் அடையாளம் மாறியதற்கு முக்கியமான ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். 


 




சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஷகீலா தன்னுடைய முதல் படத்தில் அவருக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தார். 


"நான் நடித்த முதல் படத்தில் நீச்சல் குளத்தில் குதிப்பது போல ஒரு காட்சி இருக்கும். நானும் என்னுடைய தங்கை இருவருமே அந்த காட்சியில் நடித்திருந்தோம். காட்சிப்படி  நான் முதலில் குதிக்க எனக்கு பிறகு என்னுடைய தங்கை குதிக்க வேண்டும் என இருந்தது.  எங்கள் இருவருக்குமே நீச்சல் தெரியாது. முதலில் நான் குதித்துவிட்டேன். என்னை தொடர்ந்து என்னுடைய தங்கை குதித்து அவள் உடனே மேலே வந்துவிட்டாள். ஆனால் என்னுடைய தங்கை எனக்கு மேலே குதித்ததால் நான் அப்படியே கீழே போய்விட்டேன். என்னால் மேலே வரமுடியவில்லை. எவ்வளவு முயற்சி செய்தும் என்னால் வரமுடியவில்லை. 


படப்பிடிப்பில் இருந்த ஒருவர் தான் தண்ணீருக்குள் குதித்து என்னை காப்பாற்றி மேலே அழைத்து வந்தார். இந்த விபத்தில் நான் அணிந்து இருந்த பிகினியின் மேலாடை கிழிந்துவிட்டது. அப்போது என்னிடம் வேறு எந்த ஒரு துணியும் இல்லை. அந்த படப்பிடிப்பு நடக்கும் சமயத்தில் வேறு ஏதோ ஒரு நிகழ்ச்சி அருகில் நடந்து கொண்டு இருந்ததால் ஏராளமானோர் அந்த இடத்தில் கூடி இருந்தார்கள். அனைவருமே என்னை அப்போது பார்த்துக் கொண்டு இருந்தது எனக்கு அவமானமாக இருந்தது. என்ன செய்வதென தெரியாமல் தவிக்கும் போது கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் ஒரு துணியை தூக்கி என் மீது போட அதை எடுத்து போர்த்திக்கொண்டு ரூமுக்கு ஓடிவிட்டேன். இந்த மோசமான அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது" என மிகவும் மனம் வேதனைப்பட்டு பேசி இருந்தார் நடிகை ஷகீலா.