பாலிவுட் படம் ஒன்றிற்கான ஆடிஷனில் கலந்து கொண்ட போது அப்படத்தின் இயக்குநர் தன் மார்பகத்தை பெரிதுப்படுத்த சொன்னதாக நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார். 


ஆந்திராவைச் சேர்ந்த நடிகை சமீரா ரெட்டி ,கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான மெய்னே தில் துஜ்கோ தியா என்ற இந்தி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து முஸாபிர், பிளான், ஜெய் சிரஞ்சீவா, டாக்ஸி எண் 9211, அசோக், ரேஸ் என படங்களில் நடித்து கவனம் பெற்றார். இவரை தமிழில் 2008 ஆம் ஆண்டு கௌதம் மேனன் “வாரணம் ஆயிரம்” படத்திற்காக அழைத்து வந்தார். தமிழில் நடுநிசி நாய்கள், வேட்டை, வெடி உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் வாரணம் ஆயிரம் ஒன்றே இன்றளவும் சமீரா ரெட்டியின் அடையாளமாக திகழ்கிறது. 






இந்தி, தெலுங்கு, பெங்காலி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வலம் வந்த சமீரா ரெட்டி,  2014 ஆம் ஆண்டு மகாராஷ்ட்ராவை சேர்ந்த அக்‌ஷய்குமார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டு செட்டிலானார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான சமீரா ரெட்டி, படங்களில் நடிக்காவிட்டாலும் வயதுக்கேற்ற தோற்றத்தோடு எவ்வித மேக்கப்பும் இல்லாமல் பொதுவெளியில் தோன்றி வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், கர்ப்பகால வீடியோக்களை வெளியிட்டு அனைவருக்கும் பல ஆலோசனைகளையும் வழங்கினார். 


இப்படியான சமீரா ரெட்டி, சமீபத்தில் நேரலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் ஆடிஷனின் போது தனக்கு நடந்த மோசமான அனுபவம் குறித்து கேள்வியெழுப்பினார். அதற்கு, பாலிவுட் திரைப்படம் ஒன்றின் ஆடிஷனில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன். அப்போது இயக்குநர் ஒருவர் என்னை ஏற இறங்க பார்த்தார். பின் உங்கள் மார்பகம் கவர்ச்சியாக இல்லை, இதனை அழகாகவும், பெரியதாகவும் காட்ட அறுவை சிகிச்சை செய்யும்படி தெரிவித்துள்ளார். 


ஆனால் நான் அறுவை சிகிச்சை செய்யாமல் இயற்கையாக மார்பை பெரிதாக காட்ட முயற்சி செய்தேன். ஆனால் மீண்டும் இயக்குநர் அறுவை சிகிச்சை செய்ய சொன்னார். இருப்பினும் மார்பினும் பெரிதாக தெரிய செயற்கையான பேடுகளை பயன்படுத்தி வந்தேன். பல நேரம் இதெல்லாம் தேவையா என நினைப்பேன். இதுதான் என் மோசமான அனுபவம் என சமீரா ரெட்டி கூறியுள்ளார்.