ஹேமா கமிட்டி அறிக்கை


கேரள திரையுலகில் நடிகைகள் ஆண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது குறித்த ஹேமா அறிக்கை சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து  நடிகைகள் பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உட்பட பலர் மேல் பாலியல் குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளார்கள். இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பின் போது நடிகைகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுப்பது , அட்ஜஸ்ட் செய்தால் சினிமாவில் வாய்ப்புகள் தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்வது என பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கான முன்னெடுப்புகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. 


இதுதவிர்த்து கேரள திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் இருந்து நடிகர் மோகன்லால் உட்பட அவரது தலைமையில் சங்கத்தை நிர்வகித்த 17 பெயர்கள் தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மலையாளத்தில் நடிகைகள் பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டிவரும் நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான குரல்கள் எழுந்துள்ளன. 


தெலங்கானா அரசுக்கு சமந்தா கோரிக்கை


தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தெலுங்கு திரைத்துறை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து மேற்கொள்ள ஆய்வினை வெளியிடுமாறு தெலங்கானா அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தாவின் பதிவில் அவர் இப்படி கூறியுள்ளார். 






“கேரளாவில் வெளியாகி இருக்கும் ஹேமா கமிட்டியை தெலுங்கு திரையுலக நடிகைகள் எங்கள் ஆதரவைத் தெரிவிக்கிறோம். WCC  யின் தொடர் முயற்சியால் இப்படி ஒரு இயக்கம் உருவாகியிருப்பது பாராட்டிற்குரியது. WCC யின் பரிந்துரையின் பேரில் கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகிலும் வாய்ஸ் ஆஃப் வுமன் என்கிற குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையை வெளியிடுமாறும் தெலங்கானா அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். தெலுங்கு திரையுலகில் நடிகைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில் அரசும் திரைத்துறையினரும் புதிய விதிமுறைகளை ஏற்ற உதவிகரமாக இந்த அறிக்கை இருக்கும்.” என சமந்தா கூறியுள்ளார்.