நடிகை சமந்தா மறுமணம் செய்வது தொடர்பாக சிந்தித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது காதல் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சமந்தா கடந்தாண்டு வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். இதனால் அவரின் அடுத்தடுத்த படங்கள் மீது ரசிகர்களின் கவனம் குவிந்து வருகிறது.
தமிழில் கடைசியாக விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் நடிப்பில் யசோதா படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி படம் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வரும் சமந்தாவின் சாகுந்தலம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் விவாகரத்து நடந்து ஒரு வருடங்கள் முடியவுள்ள நிலையில் இதுவரை சமந்தாவிடமும், நாகசைதன்யாவிடமும் பிரிவு தொடர்பாகவும், மறுமணம் செய்வது தொடர்பாகவும் பல இடங்களில் கேள்வியெழுப்பப்பட்டாலும் அவர்கள் எவ்வித பதிலும் சொல்லாமல் அமைதி காத்து வந்தனர். அதேசமயம் நாகசைதன்யா பொன்னியின் செல்வனில் நடித்துள்ள ஷோபிதா துலிபாலாவுடன் காதலில் விழுந்து விட்டதாக தகவல் வெளியானது. இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றி வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தனது குருவாகவும் வழிகாட்டியாகவும் கருதும் சத்குரு ஜக்கி வாசுதேவ் உடன் சமீபத்தில் ஹைதராபாத்தில் உரையாடினார். அப்போது அவர் சமந்தாவை மீண்டும் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு சமந்தாவும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் ரசிகர்களுக்கு நல்ல செய்தி வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.