நடிகர் சந்தானம் புலிவாலை பிடித்த சம்பவத்தில், அவரை சக நடிகை ஒருவர் கடுமையாக விமர்சித்தது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். சமீபத்தில் கூட அவர் நடிப்பில் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் வெளியாகியிருந்தது. இந்த படம் வரும் புத்தாண்டை முன்னிட்டு, சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் ஒரு சில படங்களை தவிர மற்றவை பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை என்றாலும், வித்தியாசமான கேரக்டரை தேர்வு செய்வதால் ரசிகர்களும் சந்தானம் படத்தை விரும்பி பார்க்கிறார்கள். 






இதனிடையே நடிகர் சந்தானம் கிறிஸ்துமஸ் மற்றூம் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடும் விதமாக வெளிநாடுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். சில தினங்களுக்கு முன் அங்கிருந்து அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது; உயிரியல் பூங்கா ஒன்றில் அங்கு படுத்திருந்த புலியுடன் வீடியோ எடுத்து பதிவிட்டார். அதுமட்டுமில்லாமல் புலியின் வாலை பிடித்தார். 


ஆனால் புலியிடம் எந்த அசைவும் இல்லாததால் அது தூக்கத்தில் உள்ளதா? என அங்கிருந்த ஊழியரிடம் சந்தானம் கேட்டார்; உடனே பூங்கா ஊழியர் புலியை மண்டையில் தட்டி எழுப்புகிறார். இருந்தும் புலி ஒருவித மயக்க நிலையிலே உள்ளது. புலியை சந்தானம் தடவிக் கொடுக்கிறார். மேலும் அந்த வீடியோவில், “இதுக்கு பேர் தான் புலி வாலை பிடிக்கிறதா?” என கேப்ஷன் பதிவிட்டிருந்தார். 






இந்த வீடியோ கடும் சர்ச்சையான நிலையில், பலரும் புலியை இப்படி துன்புறுத்தி மகிழ வேண்டுமா என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு இணையவாசிகள் பலரும் விமர்சித்து தள்ளினர். அந்த வகையில் தெலுங்கு நடிகையான ராஷ்மி கௌதம்,  “புலி மீது உங்களுக்கு எந்த வித அனுதாபமும் ஏற்படவில்லையா?.. மயக்கத்தில் இருக்கும் புலி தொந்தரவு செய்ததால் அது எழுந்தது.உங்களை வலிமையான மனிதராக காட்டுவதற்காக இப்படி செய்தீர்களா?  அல்லது உங்கள் உணர்திறனை இழந்துவிட்டீர்களா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.