10ஆம் வகுப்புக்குப் பிறகு டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்கத் தகுதியானவர்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


10ஆம் வகுப்புக்குப் பிறகு 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு, பட்டப் படிப்பைப் படித்திருக்க வேண்டும் என்று இந்திய பார் கவுன்சில் அறிவித்திருந்தது. அதனால் 10ஆம் வகுப்புக்குப் பிறகு டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப் படிப்பைப் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. 


அந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அதைத் தொடர்ந்து 10ஆம் வகுப்புக்குப் பிறகு டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்கத் தகுதியானவர்கள் என்று பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 


எனினும் இந்த உத்தரவை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் பின்பற்றவில்லை என்றும் டிப்ளமோ முடித்து, பொறியியல் படித்த தனதுக்கு சட்டப் படிப்பு படிக்க இடம் கிடைக்கவில்லை என்று கூறி, கோயம்புத்தூரைச் சேர்ந்த கோமதி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.


பார் கவுன்சில் இந்த வழக்கில் பதிலளிக்கும்போது, ’’10ஆம் வகுப்புக்குப் பிறகு டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்கத் தகுதியானவர்கள் என்று முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 


இனி வரும் கல்வி ஆண்டு முதல் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கத் தகுதி வாய்ந்தோர் குறித்த கொள்கை விளக்கக் குறிப்பேடு வெளியிடப்பட உள்ளது. 


இதையடுத்து டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்கத் தகுதியானவர்கள் என்று அதில் குறிப்பிட வேண்டும் என்று கூறி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் வழக்கை முடித்து வைத்தார்.  


சட்டப் படிப்புகள்


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Dr. Ambedkar Law University) மற்றும் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் சட்டக் கல்லூரிகளில்,  
பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ்
பிபிஏ எல்எல்பி ஹானர்ஸ்
பி.காம். எல்எல்பி ஹானர்ஸ்
பி.சி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ் ஆகிய 4 படிப்புகளும் வழங்கப்படுகின்றன. 


அதேபோல தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்கழகத்துடன்‌ இணைவுபெற்ற அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும்‌ மற்றும்‌ தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ சீர்மிகு சட்டப் பள்ளியிலும்‌ 3 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மூன்று ஆண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப் படிப்பும் கற்பிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 3 ஆண்டு எல்எல்பி ஹானர்ஸ் படிப்பு மற்றும் 3 ஆண்டு எல்எல்பி பட்டப் படிப்பு ஆகிய படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.