ராதிகா சரத்குமார்


ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மலையாள நடிகைகள் திரையுலகைச் சேர்ந்த பிரபல ஆண்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் திரையுலகிலும்  நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பேச முன்வந்துள்ளார்கள். அந்த வகையில் நடிகை ராதிகா சரத்குமார் தனக்கு ஏற்பட்ட சில அதிர்ச்சிகரமான நிகழ்வுகளை துணிந்து பேசியுள்ளார். மலையாள படப்பிடிப்பின் போது நடிகைகள் கேரவானில் துணி மாற்றுவதை  ரகசிய கேமராக்கள் வழியாக பார்த்ததாக ராதிகா கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 நடிகர் விஷால் பற்றி ராதிகா சரத்குமார்


தமிழ் திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்வது குறித்து பேசிய ராதிகா ‘ சில பெண்கள் தங்களுக்கு அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை என்று சொல்வார்கள் ஆனால் அவர்களுக்கு நடந்தது என்று எனக்கு தெரியும். எனக்கு அது நடந்திருக்கிறது. பெண்கள் தங்கள் குடும்ப சூழல்கள் காரணமாகவும் பல்வேறு போராட்டங்களை கடந்து நடிக்க வருகிறார்கள். அப்படியான பெண்கள் தங்களுக்கு இப்படி நடந்து என்று சொல்லவந்தால் அவர்களிடம் ஆதாரம் கேட்கிறார்கள். பாடகி சின்மயி தனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்ததாக புகாரளித்தார். ஆவர் சொல்வது உண்மையா இல்லையா என்று கூட தெரிந்துகொள்ளாமல் அவரை சமூக வலைதளத்தில் வசைபாடி அவருக்கு வேலை வாய்ப்பு போனது. யார் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள் ? எந்த பெண் சொன்னாலும் ஏன் அந்த பெண்ணை யாரும் நம்பவில்லை


சமீபத்தில் விஷாலிடம் இதுபற்றி கேள்வி எழுப்பியபோது யார் வேண்டுமானாலும் இப்படி புகாரளிக்கலாம் என்று விஷால் பதில் சொல்கிறார். அது முதலில் பதிலே அல்ல. நேற்று யூடியூபில் யாரோ ஒருவன் நடிகர்கள் இப்படி எல்லாம் இருந்தால் தான் முன்னுக்கு வர முடியும் என்று சொல்கிறார். நான் சொல்கிறேன் விஷாலுக்கு தைரியம் இருந்தால் அந்த நபரை போய் செருப்பால் அடிக்கட்டும். விஷால் பொதுச் செயலாளர் தான. அவர் ஒரு சரியான ஆம்பளையாக இருந்தால் போய் அடிக்கட்டும்.  நானும் கூட வரேன்.  நான் இன்று ரொம்ப கோபமாக இருக்கிறேன். விஷால் பேசியிருப்பது ஒரு இன்சென்ஸிட்டிவான விஷயம்.  இது ஒரு தலைவன் பேசும் பேச்சா? 


உண்மையை வெளியே சொல்லாமல் எல்லா பெண்களுக்கும் தைரியம் கிடையாது. நீங்கள் எல்லா ஆண்களும் அமைதியாகி இந்த பிரச்சனை மீண்டும் அந்த பெண்களின் தலைமீது தான் விழும். நீங்கள்  நடிகர்கள் தயாரிப்பாளர்கள் எல்லாம் சேர்ந்து எங்களிடம் வந்து எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் .  எல்லாரும் சேர்ந்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்யலாம்” என்று ராதிகா தெரிவித்துள்ளார்.