நடிகை பூர்ணா திருமண தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை பூர்ணாவின் இயற்பெயர் ஷாம்னா காசிம். மலையாள திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் நடித்த பூர்ணா, தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  


சினிமாவுக்காக தனது பெயரை பூர்ணா என மாற்றிக்கொண்ட இவர், அதனைத்தொடர்ந்து கொடைக்கானல், வேலூர் மாவட்டம், துரோகி, தகறாறு, தலைவி, 100  உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இவர் தற்போது தனது திருமணம் தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். ஆம், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ஆஷிஃப் அலியை நீண்ட நாட்களாக காதலித்து வந்த பூர்ணாவுக்கு கடந்த மே மாதம் அவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்த நிலையில்  துபாயில் அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. 


 







இது தொடர்பாக பூர்ணா வெளியிட்டு இருக்கும் பதிவில், “ நான் இந்த உலகிலேயே அழகான பெண்ணாக இல்லாமல் இருக்கலாம். ஒரு நல்ல மனைவியின் எந்த பண்புகளும் என்னிடம்  இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு போதும் என்னை குறைவாக உணரவில்லை. நான் யார் என்பதற்காக நீங்கள் என்னை நேசித்தீர்கள். என்னை ஒருபோதும் மாற்ற முயற்சிக்கவில்லை. இது என்னில் உள்ள சிறந்ததை வெளிக்கொண்டு வர என்னை நானே மேலும் உழைக்க ஊக்குவித்தது.


இன்று நமக்கு நெருங்கிய மற்றும் அன்பானவர்களுக்கு மத்தியில் நீங்களும் நான் இந்த திருமண வாழ்கையை தொடங்குகிறோம். இது ஒற்றுமையின் அற்புதமான பயணம். இது கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்பது எனக்குத் தெரிகிறது. ஆனால் நான் உன்னுடன் இன்ப துன்பங்களில் இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன் உன்னை நேசிக்கிறேன்." என்று பதிவிட்டு இருக்கிறார். பூர்ணா திருமணம் செய்திருக்கும் தொழிலதிபர் ஆஷிஃப் அலியை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜெபிஎஸ் குரூப் என்ற நிறுவனத்தின் சிஇஓ வாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.