கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் பாதிப்பால்  இறந்துவிட்டதாக பொய்யான தகவல் பரப்பிய காரணத்திற்காக நடிகை பூனம் பாண்டேவின் மீது புகாரளிக்கப் பட்டுள்ளது.


பூனம் பாண்டே


சர்ச்சைக்குரிய நடிகையாக திரையுலகில் வலம் வந்த பூனம் பாண்டே கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி  கர்ப்பைப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியானது. இது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.  பூனம் பாண்டே உயிரிழந்தது தொடர்பான செய்தி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் புரட்டி போட்டது. பலராலும் இந்த தகவலை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நடந்த நிகழ்வு அவர் இறப்புக்கு வருந்திய அனைவரும் அவர் மீது வெறுப்படைந்தார்கள்.


விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி ஒரு ஸ்டண்ட்


"நான் உயிருடன் தான் இருக்கிறேன். கர்ப்பவாய் புற்றுநோய் என்னைக் கொல்லவில்லை. ஆனால் சோகம் என்னவென்றால், இந்த நோயை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றிய அறிவு இல்லாததால் இந்நோய் ஆயிரக்கணக்கான பெண்களின் உயிரைக் கொன்றுள்ளது. மற்ற புற்றுநோய்களைப் போலல்லாமல், கர்ப்பவாய் புற்றுநோய் முற்றிலும் தடுக்கக்கூடியது. இந்த நோயினால் யாரும் உயிரை இழக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் உள்ளன" என்று பேசி பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டார் . கர்ப்பப்பை வாய் புற்று நொய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே தான் இப்படி செய்ததாக அவர் கூறினார். 


கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்


கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மாதிரியான ஒரு உயிர்கொள்ளும் நோயால் எத்தனை பேர் சிரமப்பட்டுள்ளார்கள். இப்படியான ஒரு சென்சிட்டிவான விஷயத்தை எடுத்து பப்ளிட்டிக்காக இப்படி ஒரு கீழ்த்தரமான விஷயத்தை செய்துள்ளதாக கூறி பூனம் பாண்டேவை பலர் விமர்சித்தார்கள். மேலும் அவரது இந்த செயலுக்காக அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று பலர் கூறினார்கள்.


இதனைத் தொடர்ந்து பூனம் பாண்டே தனது செயல் பலரை காயப்படுத்தி இருப்பதால் மன்னிப்பு கேட்டார். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்லெண்ணத்தில் தான் இப்படி செய்ததாக அவர் விளக்கமளித்தார். 


100 கோடி அபராதம்


தற்போது நடிகை பூனம் பாண்டே அவரது முன்னாள் கணவரான சாம் பாம்பே ஆகிய இருவரது மீது ஃபைஸன் அன்ஸார் என்பவர் கான்பூர் கமிஷனரிடம் புகாரளித்துள்ளார்.  தனது இறப்பு குறித்து பொய்யான தகவல் பரப்பியதாகவும் , தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காக தீவிர பிரச்சனை ஒன்றை பயன்படுத்தியதாகவும். திரை பிரபலங்களின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கையை உடைத்த காரணத்திற்காகவும் பூனம் பாண்டே மீதும் அவரது முன்னாள் கணவர் சாம் பாம்பே மீதும் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கச் சொல்லு அவர் புகாரளித்துள்ளார். மேலும் பூனம் பாண்டே மற்றும் சாம் பாம்பே ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்ய ஆணை பிறப்பிக்கும்படியும் அவர்களை கான்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக கேட்டுக் கொள்ள இந்த புகாரில் குறிப்பிடப் பட்டுள்ளது.