‘பூ’ படத்தில்  ‘சூச்சூ மாரி’யாக அறிமுகமாகி, தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட ஓமணப் பெண் நடிகை பார்வதி திருவோத்துவின் பிறந்த நாள் இன்று!


ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான நடிப்பு, வசீகரம், புத்திசாலித்தனம், சமூக அக்கறை என ஒட்டுமொத்த குவியலாக வலம் வரும் நடிகை பார்வதிக்கென தென்னிந்தியா தாண்டியும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.


டிவி தொகுப்பாளினி டூ நடிகை


1988ஆம் ஆண்டு கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் பிறந்த பார்வதி, முதன்முதலில் தன் திரைப் பயணத்தைத் தொடங்கியது சின்னத்திரையில்.  டிவி தொகுப்பாளினியாக அறிமுகமான பார்வதி, 2006ஆம் ஆண்டு ‘அவுட் ஆஃப் சிலபஸ்’ எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.




அதன் பின்னர் கன்னட திரைப்படமான மிலானா மூலம் ஹீரோயினாக முதன்முதலில் களமிறங்கிய பார்வதி, 2008ஆம் ஆண்டு இயக்குநர் சசியின் ’பூ’ படத்தின் மூலம் மாரி எனும் கிராமியப் பெண்ணாக நடித்து கோலிவுட் சினிமா ரசிகர்கள் தொடங்கி சினிமா ஜாம்பவான்கள் வரை பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.


தங்கராசுவின் மாரி... பூ பார்வதி


தன் முறைப்பையனான தங்கராசுவை நினைத்து காதலில் உருகியபடியும், வெள்ளந்தி கிராமத்துப் பெண்ணாகவும் முதற்காதலை அவ்வளவு இயல்பாக, ரசனை பொங்க கண்முன்னே கொண்டு வந்து நிறுத்து மாரி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருதார் நடிகை பார்வதி!


கோலிவுட்டின் இயக்குநர் இமயமாகத் திகழும் இயக்குநர் பாரதிராஜா தொடங்கி பல இயக்குநர்களும் பூ பார்வதியை உச்சிமுகர்ந்து புகழ்ந்தனர்.




சிறந்த நடிகர்களுடன் திரைப்பயணம்


மரியான், அதனைத் தொடர்ந்து பெங்களூர் டேஸ், என்னு நிண்டே மொய்தீன், சார்லி, உயரே, கூடே, வைரஸ், கரிப் கரிப் சிங்கிள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என  நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பல கதாபாத்திரங்களையும் அனைத்து மொழிகளிலும் தன் 17 ஆண்டுகால திரைப்பயணத்தில் பார்வதி நடித்துள்ளார். 


தமிழில் நடிகர் கமல்ஹாசனுடன் உத்தம வில்லன், மலையாளத்தில் நடிகர் மம்மூட்டி உடன் புழு, இந்தியில் நடிகர் இர்ஃபான் கான் உடன்  கரிப் கரிப் சிங்கிள் என பல மொழிகளின் முன்னணி நடிகர்களுடனும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடிப்பதில் பார்வதிக்கு நிகர் பார்வதியே!


பளிச் விமர்சனம் வைக்கும் ஃபெமினிஸ்ட் 


நடிப்பு தாண்டி புத்தகங்கள் வாசிப்பது, சமூக செயற்பாட்டாளர், மேடைப் பேச்சாளர் என வலம் வந்து பெண்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார் பார்வதி. தன் படங்களிலேயே தென்படும் இஸ்லாமிய வெறுப்பை சுய விமர்சனம் செய்வது தொடங்கி, இந்திய சினிமாவின் கல்ட் க்ளாசிக் படமாக உருவெடுத்த ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தை அப்படத்தின் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் முகத்துக்கு எதிராகவே விமர்சித்தது வரை தன் கருத்துகளை எங்கும் எப்போதும் மிக அழுத்தமாக பார்வதி முன்வைத்து வந்துள்ளார்.




மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான கஸாபா படம் ஆணாதிக்க கருத்துகளை ஊக்குவிக்கிறது என்றும், மம்மூட்டி போன்ற நடிகர் இப்படிப்பட்ட வசனங்களைப் பேசி நடிப்பது வருத்தமளிக்கிறது எனவும் பார்வதி முன்வைத்த கருத்துகள் மலையாளத் திரையுலகில் தீயாய் பற்றி எரிந்தன.


சூப்பர் ஸ்டார் ஒருவரின் படத்தின் மீது தன் எதிர்ப்பை அழுத்தமாக முன்வைத்த நடிகை பார்வதி
’ஃபெமினிச்சி’ என இன்றளவும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். ஆனால் இவற்றையெல்லாம் இடதுகையால் புறந்தள்ளி தொடர்ந்து பெண்களுக்காக குரல் எழுப்பி வந்ததுடன், சென்ற ஆண்டு மீண்டும் மம்மூட்டியுடன் சேர்ந்து புழு படத்தில் நடித்து லைக்ஸ் அள்ளினார்.


மலையாள சினிமாவில் பெண்களுக்கான அமைப்பு


திரைப்படங்களில் பெண்களின் கதாபாத்திரங்கள் போதிய முக்கியத்துவம் அளித்து எழுதப்படுவதில்லை என தொடர்ந்து விமர்சித்து வரும் பார்வதி, மலையாள சினிமாவில் பெண்களுக்காகத் தொடங்கப்பட்ட அமைப்பான விமன் இன் சினிமா கலெட்க்டிவ்வின்  நிறுவனர்களில் ஒருவர். இந்த அமைப்பு தொடர்ந்து மலையாள சினிமாவில் இயங்கும் பெண்களுக்காக குரல் கொடுத்து வருகிறது.


தொடர்ந்து தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வரும் பார்வதி, தற்போது இயக்குநர் பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவில் செயற்படும் பெண்களுக்காக அவரது குரல் மேலும் உயர வாழ்த்துகள்!