தன்னை கிண்டல் செய்த மீம்ஸ்களை பார்த்து என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என நடிகை நுஷ்ரத் பருச்சா கூறியுள்ளார்.


சமூக வலைத்தளங்கள் வளர்ச்சியடைந்த காலகட்டம் முதலே தனி நபர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் பிரபலங்கள் மீதான கேலி, கிண்டல்கள், மீம்ஸ்கள் என கருத்து சுதந்திரம் என்ற பெயரில் செய்யப்படும் விமர்சனங்கள் பலருக்கும் அதிருப்தியையே ஏற்படுத்தி வருகிறது. இந்த கேலி, கிண்டல்களுக்கு சம்பந்தப்பட்ட பிரபலங்கள் எதிர்மறையாக பதிலளித்தால் அவ்வளவு தான் மேலும் சகட்டுமேனிக்கு இணையவாசிகள் பலரும் விமர்சிக்க தொடங்கி விடுவது வழக்கமான ஒன்றாகி வருகிறது. 


அந்த வகையில் இந்திய திரையுலகை எடுத்துக் கொண்டால் அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை படங்கள், நடித்த நடிகர்கள் என அனைத்தையும் மீம்ஸ்கள், ட்ரோல் வீடியோக்கள் என இணையத்திற்குள் நுழைந்தால் ஏராளமாக இருப்பதை காணலாம். சமீபத்தில் கூட தமிழ் சினிமாவில் நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் ஆகியோர் பீஸ்ட் படத்திற்காக உலகளவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.




இந்நிலையில் நடிகை நுஷ்ரத் பருச்சா தான் நடிச்ச ஜன்ஹித் மெய்ன் ஜாரி படத்திற்காக கடுமையான கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் வாழும் ஒரு இளம் பெண் தனது சொந்த ஊரில் ஆணுறை விற்பனை செய்யும் சவாலான பணியை மேற்கொள்ளும் கேரக்டரில் அவர் இப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. 


இதில் குறிப்பிட்ட அந்த காட்சியை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவரை  மோசமாக விமர்சிக்க தொடங்கினர். இதனைக் கண்ட நுஷ்ரத் பருச்சா ஒரு கட்டத்தில் தன் மீதான விமர்சனங்களுக்கு இன்ஸ்டாகிராம் வீடியோவில் பதிலளித்தார். 


இதற்கிடையில் பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள அவர், ஜன்ஹித் மெய்ன் ஜாரி படத்தில் தன் கேரக்டர் மீதான கேலி, கிண்டல்கள் தன்னை மட்டுமல்லாது தனது குடும்பத்தினரையும்,  நண்பர்களையும் கடுமையாக பாதித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இதனை பார்த்து என்னால் 2 நாட்களாக தூங்க கூட முடியவில்லை. அந்த அளவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக நுஷ்ரத் பருச்சா கூறியுள்ளார். 


நானும் முதலில் அதனை  மறந்துவிட்டு முன்னேற நினைத்தேன். ஆனால்  ஜனநாயக நாட்டில் வாழும் நான் கருத்து சுதந்திரம் இருக்கும் போது ஏன் அதனை விட்டு விட்டு நகர முயற்சிக்க வேண்டும் என எண்ணினேன். அதன் விளைவாகவே அந்த இன்ஸ்டாகிராம் வீடியோவை வெளியிட்டேன் எனவும் நுஷ்ரத் பருச்சா தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஜன்ஹித் மெய்ன் ஜாரி  படம் கடந்த ஜூன் 10 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண