வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களான நயன் -விக்கி விவகாரத்தை ஆராய்வதற்காக சுகாதாரத் துறையை சேர்ந்த மூன்று பேர் கொண்ட குழு சுகாதார இணை இயக்குனர் தலைமையில் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியன். 


தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இருவரும் ஐரோப்பிய நாடுகளுக்கு தேன் நிலவிற்கு சென்று திரும்பிய பிறகு இருவரும் அவரவர் வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்தனர். 


 



 


திடீர் செய்தி சொன்ன நயன்-விக்கி : 


நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்ள போகிறார். அதனால் வேறு எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை போன்ற தகவல்கள் வெளியாகின. அந்த சமயத்தில் திடீரென கடந்த 9-ஆம் தேதி விக்னேஷ் சிவன் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன என்ற அதிகாரபூர்வமான தகவலை சோஷியல் மீடியா மூலம் அறிவித்து அதிர்ச்சி அளித்தார். 


வாடகை தாய் குறித்து விசாரணை : 


வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது குறித்து ஏராளமான சர்ச்சைகள் எழுந்தன. இது குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், திருமணம் முடிந்து 5 ஆண்டுகளுக்கு பிறகே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். திருமணமாகி சில மாதங்களே ஆன நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு விளக்கம் கேட்கப்படும் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார். 






மூன்று பேர் கொண்ட குழு நியமனம் :


இந்த விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் தற்போது வெளியிட்ட தகவலின்படி சுகாதார இணை இயக்குனரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஒன்று இது குறித்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்துவார்கள் என்றும் குழந்தை பிறந்த மருத்துவமனையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தேவையான விதிமுறைகள் அனைத்தும் முறைப்படி உள்ளதா என்பதையும் சரிபார்க்க நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதாக தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பிறகு இந்த வாடகை தாய் குறித்த முழு விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.