நான் ரொம்ப தைரியசாலின்னு ஜெயலலிதா அம்மா சொன்னாங்க. அவுங்ககிட்ட வாங்கின அந்தப் பாராட்டுதான் என் வாழ்க்கையின் பெஸ்ட் காம்ப்ளிமென்ட் என்று நடிகை நளினி கூறியுள்ளார்.


1980களில் தென்னிந்திய திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் நளினி. தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் மோகன்லால், மம்மூட்டி, விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் மோகன் ஆகியோருடன் நாயகியாக நடித்துள்ளார். நேர்த்தியான குடும்பப்பாங்கான அழகு, ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான நடிப்பு என்று தனக்கென தனி முத்திரை பதித்தவர் நளினி. நடிகர் ராமராஜனை திருமணம் செய்து அவரைப் பிரிந்துவிட்டார். தனது இரண்டு குழந்தைகளையும் நன்றாகப் படிக்கவைத்தார். இப்போது சீரியல்களில் நடிக்கிறார்.


அவருடைய பேட்டி..


எனக்கு எப்போதும் கொடுப்பதில் மகிழ்ச்சி உண்டு. நிறைய கொடுப்பேன். ஆனா இப்போ என் புள்ளைங்க கொஞ்சம் என்னைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளனர். எனக்கு சேலைகள் மீது கொள்ளை ஆசை. சேலைகள் வைக்கவே ஒரு வீடு வச்சிருக்கேன். இரவு 7.30 மணிக்கு படுக்கச் சென்றுவிடுவேன். காலை 3.00 மணிக்கு எழுந்துவிடுவேன். 3.30 மணியளிருந்து பிரார்த்தனை, பூஜைகள் செய்வேன். அப்போது என் மனநிலையே வேறு மாதிரி இருக்கும். இப்போல்லாம் நிறைய நன்றி சொல்றேன். இந்த பிரபஞ்சத்துக்கே நன்றி சொல்றேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன்.


எனக்கு சாப்பாடு ரொம்ப பிடிக்கும். சைனீஸ் உணவு பிடிக்கும். மாதத்தில் ஒருநாள் ஹோட்டலில் சாப்பிடுவேன். சாம்பார் உருளைக்கிழங்கு சூப்பரா சமைப்பேன்.


இப்போ இருக்கும் நடிகைகள் எல்லோரும் ரொம்ப புத்திசாலிகள். நல்லா படிச்சிட்டு வருகிறார்கள். என்ன வேண்டும். எதை செய்ய வேண்டும். எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். முக்கியமா தங்களை மார்க்கெட் செய்துகொள்ள தெரிந்திருந்திருக்கிறது.


அதேபோல் இப்போதுள்ள இளைஞர்களும் எப்படி பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். பணம் சேமிக்க வேண்டும் என்றெல்லாம் தெரிந்து வைத்துள்ளார்கள். அவர்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.


நான் கொரோனா லாக்டவுனில் நிறைய சினிமா பார்த்தேன். உண்மையில் இப்போதான் சினிமாவ ரசிக்கிறேன். நிறைய படம் பண்ண வேண்டும் என நினைக்கிறேன். தனுஷுக்கு அம்மாவ நடிக்க ஆசைப்படுறேன். என் சின்ன வயசுல நான் சினிமாவ ரசிச்சதில்லை. அம்மா தான் கதை கேட்பார்கள். அவர் தான் எல்லாம் சொல்வார். அதனால், ஒவ்வொரு படம் முடிந்ததும் அம்மா இதற்கப்புறம் படிக்கலாமா என்று கேட்பேன். இப்படியே 100 படம் நடித்துவிட்டேன். என் வாழ்க்கையில் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் படிப்பு. அதனாலேயே என் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்தேன்.


ஒருமுறை ஜெயலலிதா அம்மா என்னை அழைத்தார். என் மகள் திருமண நாள் அது. பெண், மாப்பிள்ளை, சம்பந்தியுடன் அவர் வீட்டுக்குச் சென்றேன். என்னைப் பற்றி ரொம்ப புகழ்ந்து பேசுனாங்க. தைரியமான பொண்ணு என்று சொன்னாங்க. அந்தப் பாராட்டுதான் என் வாழ்க்கையின் பெஸ்ட் காம்பிளிமென்ட்.