திரைப்படங்களுக்கு இணையாக தற்போது சீரியல்கள் வளர்ந்துவிட்டன. பாடல்,சண்டை என வெள்ளித்திரைக்கு இணையாக பயணிக்கத் தொடங்கியுள்ளது சீரியல்கள்.  திரையில் தோன்றும் நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பது போல, தற்போது சின்னத்திரைக்கும், சின்னத்திரை நடிகர்களுக்கும் அதிகளவில் ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். சோஷியல் மீடியாக்களில் தனி ஆர்மிகள் உருவாக்கப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 




அந்த வரிசையில் ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகை வானத்தைப் போல சீரியலின் தங்கை துளசி.  துளசியாக நடிகை ஸ்வேதா கெல்கே ரசிகர்களை கவர்ந்து வந்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் வானத்தைப் போல சீரியல் அண்ணன் - தங்கை சீரியலை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அண்ணன் மீது பாசத்தைக் கொட்டும் தங்கையாக நடிகை ஸ்வேதா ரசிகர்களிடையே அன்பை பெற்றுள்ளார். இவர் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தவர். தெலுங்கில் பிரபலமான மதுமாசம் சீரியலில் கவனிக்க வைத்த ஸ்வேதா, அதே வேகத்தில் தமிழுக்கு வந்தார். 


பின்னர் அவர் குறும்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் வானத்தைப்போல சீரியலில் இருந்து ஸ்வேதா விலக இருப்பதாக அவரே தெரிவித்தார். தவிர்க்க முடியாத காரணத்தினால் சீரியலில் இருந்து விலக உள்ளதாகவும், துளசியாக தன்னை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி எனவும் தெரிவித்தார். ஸ்வேதா சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.






இந்நிலையில் ஸ்வேதாவுக்கு பதிலாக நடிக்கவுள்ள புதிய துளசி யார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் புதிய துளசியாக மான்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள மான்யா, ''இன்று இரவு 8 மணி முதல் சன் டிவியில்  எனது முதல் தமிழ் சீரியலை பாருங்கள். உங்கள் அன்பும் ஆதரவும் தேவை எனக் குறிப்பிட்டுள்ளார்