90களில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்தவர் நடிகை மகேஸ்வரி. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகளான மகேஸ்வரி 1994 ஆம் ஆண்டு ‘க்ரண்ட்டிவீர்’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு 'கருத்தம்மா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரின் சிறப்பான நடிப்பால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 


 



பிரபலமாக்கிய உல்லாசம் :


பாஞ்சாலங்குறிச்சி, நாம் இருவர் நமக்கு இருவர், நேசம், ரத்னா, சுயம்வரம், என்னுயிர் நீதானே என பல  ஹிட் திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் மகேஸ்வரியின் திரை பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது அஜித் குமார், விக்ரம் உடன் இணைந்து நடித்த 'உல்லாசம்' திரைப்படம். சினிமா வாய்ப்புகள் குறையவே படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டு சின்னத்திரை பக்கம் அடியெடுத்து வைத்தார். 'அதே கண்கள்' என்ற சீரியலில் நடித்தார்.  


ஸ்ரீதேவியுடன் இருந்த பாண்டிங் :


ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரை காதல் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு மொத்தமாக முழுக்கு போட்டார். அவருக்கு பேஷன் டிசைனில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் அது சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளார். நடிக்கும் போதும் சரி தொழில் துவங்கிய போதும் சரி மகேஸ்வரிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது நடிகை ஸ்ரீதேவி. ஸ்ரீதேவி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், பார்ட்டிகள் என அனைத்திற்குமே மகேஸ்வரி டிசைன் செய்த உடைகளை தான் அணிவாராம். 


 



சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் உல்லாசம் திரைப்படத்தில் நடித்த சமயத்தில் மறக்க முடியாத ஏதாவது ஒரு அனுபவம் குறித்து கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில் "பெரும்பாலும் ஷூட்டிங் செட்டில் இருக்கும் போது யாருடனும் நான் பேச மாட்டேன். ரொம்பவும் அமைதியாக தான் இருப்பேன். ஒரு புக் ஒன்றை வைத்து கொண்டு படித்து கொண்டு தான் இருப்பேன். 


அஜித் அப்படிப்பட்டவர் :


அஜித் சாரும் அதே போல தான் யாருடனும் அவ்வளவாக பேச மாட்டார். ஆனால் அவருடன் ஒன்றாக சேர்ந்து ஒர்க் செய்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. ஒரு நடிகர் என்பதை காட்டிலும் அவர் அவ்வளவு அருமையான மனிதர். மிகவும் தன்னடக்கமானவர். அவருடைய வேலை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் அதே சமயத்தில் அனைவருடனும் நன்கு பழக கூடியவர். ஒரு நல்ல மனிதர். அவருடன் சேர்ந்து ஒர்க் செய்தது மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் நாங்கள் அவ்வளவாக ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ள மாட்டோம்.


விக்ரம் வேற லெவல் :


அதே சமயத்தில் விக்ரம் சார் நன்றாக பேசுவார். நம்மோடு பேச முயற்சி செய்வார். நம்ம அமைதியா இருந்தா கூட அழைத்து நம்மோடு பேசி அந்த நேரத்தை கலகலப்பாக்குவார். அவருடைய அறிவாற்றல் வேறே லெவலில் இருக்கும். அனைத்து விஷயங்களை பற்றியும் பேசுவார். அதனால் விக்ரம் சாருடன் கொஞ்சம் பேசி இருக்கேன். ஆனால் அஜித் சாரும் ரொம்ப அமைதியா இருந்ததால் நான் எதுவும் அவரிடம் பேசியதில்லை. அது ஒரு சைலன்ட் பீரியடாக தான் இருக்கும்" என்றார் மகேஸ்வரி.