கீர்த்தி பாண்டியன்


கண்ணகி பட நடிகை கீர்த்தி பாண்டியன் (Keerthi Pandian) சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வைரலாகி வருகிறார். நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்துகொண்ட கீர்த்தி பாண்டியன், சமூக வலைதளங்களில்  உருவக்கேலி செய்யப் பட்டார்.


தொடர்ந்து இதனை மிகவும் பக்குவமாக அணுகி தன்மீது வெறுப்பை காட்டிய நபர்களுக்கு பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் அவர் குறித்து சர்ச்சையாக பேசியதைத் தொடர்ந்து அவரை கடுமையாக சாடினார். தற்போது அவர் நடித்து வெளியாகி இருக்கும் கண்ணகி திரைப்படம் அதிகளவில் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கீர்த்தி பாண்டியனின் கணவர் நடிகர் அசோக் செல்வன் “நான் கீர்த்தி பாண்டியனுக்கு ஓனர் இல்லை அவருடைய பார்ட்னர்’ என்று சொல்லியிருந்தது ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றது.


தீப்பற்றி எறிந்த மின்சார வாகனம்


சமீப காலங்களில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வந்துள்ளது. மின்சார வாகனங்கள் திடீரென்று தீப்பற்றி எறிந்துவிடும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இதனால் மின்சார வாகனங்கள் புழக்கத்திற்கு வருவதில் பெரிய குழப்பம்  நீடித்து வருகிறது.


இந்நிலையில் இணையதளத்தில் சரவணன் என்பவர் தன்னுடைய மின்சார கார் திடீரென்று தீப்பற்றி எறிந்த நிகழ்வை வீடியோவாக இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் இது தொடர்பான நிறுவனத்திடம் அவர் தெரிவித்தபோது அந்த நிறுவனத்திடம் இருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை என்றும் தெரிவித்தார்.


தான் இந்த காரை 26 லட்சத்துக்கு வாங்கியதாகவும், பார்க் செய்திருந்த தனது கார் திடீரென்று தீப்பற்றி எறியத் தொடங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த நிகழ்வு நடந்து சுமார் 30 நிமிடத்திற்கு பிறகே தீயணைப்புக் குழுவினர் வந்து சேர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஆவேசம் காட்டிய கீர்த்தி பாண்டியன்






இந்நிலையில், சரவணகுமாரின் இந்தப் பதிவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நடிகை கீர்த்தி பாண்டியன், சரவணகுமார் தனது பக்கத்து வீட்டில் வசிப்பவர் என்றும், அவரது குடும்பத்தில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருக்கிறார்கள் என்றும் சாடியுள்ளார்.


“இந்த நிகழ்வு நடந்தபோது அவர்கள் யாரேனும் பக்கத்தில் இருந்திருந்தால் எவ்வளவு ஆபத்தாக முடிந்திருக்கும்,  இந்த மாதிரியான சூழலில் எந்த வித பதிலையும் அளிக்காமல் அமைதியாக இருப்பது பொறுப்பில்லாத செயல்” என்றும் கார் நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் கீர்த்தி பாண்டியன்.


கார் கம்பெனி அளித்த விளக்கம்


”புறக்காரணங்களால் தான் அத்தகைய விபத்து நிகழ்ந்திருக்கிறது என்பது மிக விரிவான ஆய்வுக்குப் பின் தெரியவந்துள்ளது. எங்களின் வாடிக்கையாளரும் அவரது குடும்பமும் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர். எங்களின் தொழில்நுட்ப அணி வாடிக்கையாளருடன் தொடர்பில் இருப்பதுடன், அவருக்குத் தேவையான உதவிகளையும், ஆதரவையும் வழங்கி வருகிறோம். MGI-ஐ பொறுத்தவரை, வாகன தரமும், தர நிலைகளும் தான் எங்களின் முன்னுரிமை. சமரசங்கள் இல்லாமல் அனைத்து விதத்திலும் தரமானதாக எங்களின் கார்கள் தயாரிக்கபடுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது.