விஜய் சேதுபதி குண்டா இருந்தால் ஏத்துக்குவாங்க. ஆனால், நடிகைகள் குண்டாக இருந்தால் ஏற்றுக் கொள்ளமாட்டாங்க. ஒரு நடிகை குண்டாகிவிட்டால் அவரைப் பார்த்ததுமே ஹை கூட சொல்ல மாட்டாங்க. ஏன் குண்டாகிட்டீங்க என்று கேட்பார்கள். அது ஏன் என்பது புரியவில்லை. நீங்கள் விஜய் சேதுபதியை ஏத்துக்கிட்டால் என்னையும் ஏத்துக்கோங்க என்று கூறியுள்ளார் நடிகை அபர்ணா பாலமுரளி.


இவர் மலையாளத் திரையிலிருந்து இறக்குமதியானவர். மலையாளத்தில் பஹத் பாசிலுடன் இவர் நடித்த மகேஷிண்டே பிரதிகாரம் திரைப்படம் இவருக்கு நல்லதொரு களத்தை அமைத்துக் கொடுத்தது. இவரது பெற்றோர் சோபா, பாலமுரளி இருவருமே திரைத்துரையில் இசைக்கலைஞர்கள். தந்தை பாலமுரளி அங்கு பிரபல இசையமைப்பாளர். தாய் சோபா வழக்கறிஞர். கூடவே பாடகர். பாரம்பரிய நடனங்களான பரதம், குச்சிப்பிடி, மோகினி ஆட்டத்திலும் தேர்ந்தவர்.


அபர்ணா நடித்த முதல் படம் யாத்ரா துடருன்னு. ஆனாலும் மஹேஷிண்டே பிரதிகாரம் தான் அவருக்கு பெரும் பெயர் பெற்றுத் தந்தது. தமிழில் 8 தோட்டாக்கள் படம் மூலம் அறிமுகமானார். பின்னர் சூர்யாவுடன் சூரரைப் போற்று படத்தில் பொம்மியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுவிட்டார். இப்போது இவர் நடிப்பில் படாய் ஹோ இந்திப் படத்தின் ரீமேக்கான வீட்ல விசேஷம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. நடிகர் பாலாஜியின் எழுத்தும், காமெடியும் நன்றாக உள்ளது. அவர் மலையாளத்தில் வேலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.




இந்த ரிலீஸை ஒட்டி ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டியளித்தார். அதில் அவர், “எனக்கு நடிப்பு, பாட்டு ரெண்டுமே வரும். ஆனாலும் நடிப்பு தான் என் முதல் சாய்ஸ். நான் நடிகர் சூர்யாவுடன் சூரரைப் போற்று படத்தில் நடித்தேன். அவரையும் ஜோதிகாவையும் பார்த்து நான் வியந்தேன். இருவருமே அவ்வளவு எளிமையானவர்கள். அவர்கள் என்னை நன்றாக ஊக்குவித்தனர். எனக்கு மலையாளத்தில் இருந்து தமிழ்த் திரையுலகில் சாதித்தவர்களில் நயன் மேமை ரொம்பப் பிடிக்கும். அவர் எனது சூரரைப் போற்று பார்த்துவிட்டு ஃபோன் பண்ணி பாராட்டினார். அதை மறக்கவே முடியாது. நான் முதன்முதலில் நடித்த படத்தில் வெறும் ரூ.25 ஆயிரம் சம்பளம் வாங்கினேன். ஆனால் அப்போது எனக்கு மிகப்பெரிய வெகுமதி. இன்னும் என் சம்பளம் கோடியை எட்டவில்லை. நான் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் நான் முதலில் வாங்கிய ரூ.25,000 தான் மிகப்பெரிய தொகை. நான் இன்னும் சிங்கிள் தான். இப்போ யாரையும் டேட்டிங் செய்யவில்லை. நல்ல வாழ்க்கைத் துணை அமையட்டும் என்று காத்திருக்கிறேன்.


க்ளாமர் ரோலில் நடிப்பவர்களைப் பார்க்கும் போது அவர்களின் நம்பிக்கையை பார்த்து நான் ரசித்திருக்கிறேன். பிகினி அணிவது  தவறில்லை. எனக்கு இப்போ எனக்கு என்ன உடை கம்ஃபர்டபிளாக இருக்கிறதோ அதில் நடிக்கிறேன். எனக்கு எப்போது க்ளாமர் ரோல், க்ளாமர் உடை கம்ஃபர்டபிளாக இருக்கிறதோ அப்போது அதை அணிந்து கொள்வேன். மற்றபடி இப்போ எனக்கு நான் எப்படி இருக்கிறேனோ அதுவே நன்றாக இருக்கிறது.


நான் திரைத்துறைக்கு வந்த பின்னர் கற்றுக் கொண்ட முக்கியமான விஷயம் நோ சொல்வது. எனக்கு ஒவ்வாத கதை, நபர், நட்பு என எல்லாவற்றையும் ஸ்ட்ராங் நோவால் மறுக்கிறேன்.


ஏ.ஆர்.ரஹ்மானைப் பார்த்தால் அவர் இசையில் எனக்குப் பாட ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்க ஆசை”


இவ்வாறு அவர் கூறினார்.