கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த அனு பிரபாகர் தான் ஏன் முதல் கணவரை விவாகரத்து செய்தேன் என்பதை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


அனு பிரபாகர்


1990 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான சபால சென்னிகராய  படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனு பிரபாகர். இவர்  மிஸ்டரீஸ் ஆஃப் த டார்க் ஜங்கிள் என்ற ஆங்கில படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதனையடுத்து 1999 ஆம் ஆண்டு சிவ ராஜ்குமாருக்கு ஜோடியாக ஹ்ருதயா ஹ்ருதயா படத்தின் மூலம் ஹீரோயின் எண்ட்ரீ கொடுத்தார். 


அதன்பின்னர் கன்னடத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்த அனு, தமிழில் லாரன்ஸ், குணால் நடித்த “அற்புதம்” படத்திலும், ரம்யா கிருஷ்ணன் நடித்த “அன்னை காளிகாம்பாள்” படத்திலும், விக்ரம் நடித்த “மஜா” படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்காத அவர் கன்னட திரையுலகில் சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் தன் திறமையை நிரூபித்தார்.


முதல் திருமணம்  


இவர் கேரியரின் உச்சத்தில் இருந்த போது கன்னட நடிகை ஜெயந்தியின் மகன் கிருஷ்ண குமாரை 2002 ஆம் ஆண்டு திருமண்ம செய்துக் கொண்டார். அவருடன் 12 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு அனு பிரபாகர் விவாகரத்து செய்தார். இதற்கிடையில் 2016 ஆம் ஆண்டு ரகு முகர்ஜி என்ற கன்னட நடிகரை திருமணம் செய்த அவருக்கு 
நந்தனா என்ற மகள் உள்ளார். இதனிடையே நேர்காணல் ஒன்றில் ஏன் முதல் கணவரை விவாகரத்து செய்தேன் என அனு தெரிவித்துள்ளார். 


விவாகரத்து காரணம் என்ன? 


அதாவது, “புகுந்த வீட்டில் ஜெயந்தியுடன் நான் நல்ல உறவை வளர்த்துக் கொண்டேன். ஒரு பெண்ணாக, ஒரு நடிகையாக, அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். கல்யாணத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்த வேண்டாம் என ஜெயந்தி சொன்னார். திருமணமான ஒரே ஆண்டில் 9 படங்களில் நடித்தேன். எப்போதும் கண்ணியமான ஆடைகள் அணியும் என்னை மாடர்ன் உடைகள் அணிய ஜெயந்தி வற்புறுத்தினார். திருமண வாழ்க்கைக்குள் 3வது நபர் நுழைவதை நான் விரும்பவில்லை. இது ரொம்ப பெர்சனல் விஷயம்” என அனு கூறியுள்ளார். 


மேலும், “என்னை பொறுத்தவரை  மனிதனுக்கு ஒரே ஒரு வாழ்க்கைதான். அந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்.வலியில் வாழக்கூடாது. உங்களின் மகிழ்ச்சி சாத்தியமற்றதாக தோன்றினால் வேதனையான முடிவுகளை எடுக்க வேண்டும். அதனால் தான்  நான் விவாகரத்து முடிவை எடுத்தேன்” எனவும் அனு தெரிவித்துள்ளார்.