ஒரு பெண் அழகாக இருந்தால் கொண்டாட வேண்டும். அதில் தவறேதும் இல்லை என நடிகை ஆண்ட்ரியா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அவர் இயக்கிய வேட்டையாடு விளையாடு படத்தில் ஆண்ட்ரியா ஒரு பாடலை பாடியிருந்த நிலையில் அடுத்த படத்தில் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டார். இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.  
 
இதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் 1 மற்றும் 2, என்றென்றும் புன்னகை, அரண்மனை, வலியவன், உத்தம வில்லன், தரமணி, அவள், வடசென்னை, அனல்மேல் பனித்துளி என சில படங்களில் மட்டும் ஆண்ட்ரியா நடித்தாலும் அவர் தேர்வு செய்யும் வித்தியாசமான கேரக்டர்கள் கொண்டாட வைக்க காரணமாக அமைந்தது.






இப்படியான நிலையில் இவர் ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் பேசியுள்ள ஆண்ட்ரியா, “நான் அமெரிக்காவில் மியூசிக் சம்பந்தப்பட்ட படிப்பு ஒன்றில் சேர தயாராக இருந்த நிலையில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் வாய்ப்பு வந்தது. சரி படம் நடித்தால் கிடைக்கும் பணத்தை கொண்டு படிப்பதற்கு செலவிடலாம் என நினைத்து 20 நாட்கள் அப்படத்தில் நடித்தேன். ஆனால் இப்போது என்னுடைய நிலைமை வேறு மாதிரி மாறிவிட்டது. நான் இன்னும் அந்த படத்தை பார்க்கவே இல்லை” என கூறினார். 


மேலும் அவரிடம், நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியம் தானா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, “கவர்ச்சி என்பது அவசியம் ஒன்று தான். கவர்ச்சி காட்டாத நடிகைகளை தவறாக சொல்ல முடியாது. ஆனால் அவர்களுக்கான வாய்ப்பு என்பது குறைவாகவே இருக்கும். சில கதைக்கு கவர்ச்சி தேவைப்படலாம். கவர்ச்சி காட்டாத நடிகைகள் முகம் விரைவில் ரசிகர்களின் கண்ணுக்கு தெரியாமல் போய்விடும். ஒரு பெண் அழகாக இருந்தால் அதனை கொண்டாடலாம். அதில் தப்பு எதுவும் இல்லை” என ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.  


மேலும் நான் திருமணம் செய்துக் கொள்ள ஒரு நேர்மையான ஒருவர் கிடைக்க வேண்டும்.அப்படி இருந்தால் திருமணம் செய்ய தயார் எனவும் அவர் கூறியுள்ளார். ஆண்ட்ரியா தற்போது பிசாசு 2, நோ எண்ட்ரி, பெயரிடப்படாத 2 படங்கள் ஆகியவற்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.