பெண்களை அவதூறாக பேசும் நபரை வெளியேற்ற வேண்டும் என நடிகையும் அரசியல்வாதியுமான ஸ்ரீபிரியா கோரிக்கை விடுத்து இருக்கிறார். 


விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. இதில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம், விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகியோர் பங்கேற்றனர். 


பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பநாட்களில் சுமூகமாக சென்று அதன் பின்னரான நாட்களில் சூடுபிடிக்க தொடங்கும்.ஆனால் இந்த சீசனில் ஆரம்பம் முதலே நிகழ்ச்சியில் அனல் பறக்கிறது. குறிப்பாக, அண்மையில் ஒளிப்பரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில், கதை சொல்லும் டாஸ்க் மூலம் ஃப்ரீசோனுக்கு 8 போட்டியாளர்கள் செல்ல, மீதமுள்ள போட்டியாளர்கள் மத்தியில் ரேங்கிங் டாஸ்க் ஆரம்பித்தது. இதில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்கள் அடுத்த வாரம் தலைவர் பதவி போட்டிக்கு நேரடியாக சென்று நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டிருந்தது. 


இதில் போட்டியாளர் அசீமிற்கு  கடைசி இடம் கிடைக்க, அவர் பிற போட்டியாளர்களை அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அவர்கள் தகுதியில்லாதவர்கள் என்று கூறியதோடு, அவர்களின் தனிப்பட்ட பெர்பாமன்ஸ் பற்றியும் பேசினார். அப்போது ஆயிஷாவை பார்த்து நீ எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கிறாய் என்று அசீம் சாட, ஆயிஷாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் சண்டையில் போய் முடிய, ஆயிஷாவை அசீம் தரக்குறைவாக பேசினார். அதைக்கேட்டு ஆத்திரமடைந்த ஆயிஷா செருப்பை கழற்றி அடிக்க முயன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


 






 










இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து (மறைமுகமாக) நடிகையும் அரசியல் வாதியுமான ஸ்ரீப்ரியா, “ பிக்பாஸ் பார்த்தேன். முன்னதாக வெளியான சீசன் ஒன்றில் பெண்களை மரியாதை குறைவாக பேசியதாக போட்டியாளர் ஒருவரை ரெட் கார்டு கொடுத்து அனுப்பியது போல,  இந்த சீசனிலும் பெண்களை அவதூறாக பேசியவரையும் வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் போட்டியாளர்கள் விக்ரமனை டார்க்கெட் செய்வது போல இருக்கிறது என்று பதிவிட்டு இருக்கிறார்.