நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கார்கி படத்துக்கு பின் மீண்டும் படம் ஒன்றை தயாரித்துள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 


கேரளாவைச் சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி விஷால் நடித்த ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' என்ற படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரது பாராட்டையும் பெற்றார். இதனையடுத்து சாய் பல்லவி நடித்த கார்கி படத்தை தயாரித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இப்படி தனது சினிமா கேரியரை வளர்த்துக் கொண்டு வரும் ஐஸ்வர்யா லட்சுமி  பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 


முதல் பாகத்தில் படத்தில் இவரது கேரக்டர் மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி 'அம்மு' என்ற பெயரில் தயாராகி வரும் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படம் அமேசான் பிரைம்  ஓடிடி தளத்தில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 28 ஆம் தேதி அன்று 'குமாரி' என்ற மலையாள படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார்.  






இதில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி கார்கி படத்துக்கு பின் குமாரி படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். மேலும் இப்படம் இதுவரை வெளிவராத ஜானர் என்றும், புராண இதிகாசம் தொடர்புடைய திரில்லர் திரைப்படம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளதால்  குமாரி படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 


இந்நிலையில் பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா லட்சுமி, கடந்த முப்பது நாட்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முத்தான மூன்று கதாபாத்திரங்களில்  நடித்திருக்கிறேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி வரும் ‘கட்டா குஸ்தி’ படத்தில் நடித்துள்ள அவர், இயக்குநர் ப்ரியா இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் அசோக் செல்வன் மற்றும் வசந்த் ரவி ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார்.


மேலும் ‘கிறிஸ்டோபர்’ எனும் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகளாகவும், ‘கிங் ஆஃப் கோதா’ எனும் மலையாளப் படத்தில் முன்னணி நடிகரான துல்கர் சல்மானின் ஜோடியாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.