இறுகப்பற்று படத்தில் நடித்ததற்காக முதலில் நானே எனக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் என அப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகை அபர்ணதி தெரிவித்துள்ளார். 


பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள படம் “இறுகப்பற்று”. இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ,  ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி மற்றும் பலர்  நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படம் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி வெளியானது. கணவன் - மனைவி, காதலர்களுக்குள் இருக்கும் உறவுகளையும், அதன் சிக்கல்களையும் மிக அழகாக கூறியிருக்கும் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 


மேலும் இந்த படம் யுவராஜ் தயாளன், விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, அபர்ணதி என அனைவருக்கும் மிகப்பெரிய கம்பேக் கொடுக்கும் அளவுக்கு வெற்றிகரமான படமாக அமைந்துள்ளது. நாளுக்கு நாள் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று (அக்டோபர் 12) ”ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு” நடைபெற்றது. இதில் இறுகப்பற்று படக்குழுவினர் பங்கேற்றனர். 


நடிகை அபர்ணதி பேசும்போது, “எனக்கு என்ன பேச வேண்டும் என தெரியவில்லை. இந்த படத்தில் நடித்ததற்காக முதலில் நானே எனக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் பார்த்த பார்வையாளர்களிடம் இருந்து எந்த ஒரு குறையும் வரவில்லை. ரசிகர்களுக்கு என்னுடைய நன்றி. படம் பார்த்துவிட்டு நிறைய பேர் என்னுடன் கனெக்ட் ஆகி தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு பிளாஷ்பேக் இருக்குற மாதிரி, எனக்கும் இருக்கு. இந்தப் படத்தின் மூலம் அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர் என வடிவேலு  சொன்னது போல என் வாழ்க்கையிலும் நடந்தது.


நான் சினிமாவிற்காக முயற்சி செய்தபோது என்னுடைய தந்தையின் நண்பரின் மகன், சினிமாவிற்கு போய் நீ என்ன 'கிழிக்க' போகிறாய் என்று கேட்டான். ஆனால் இன்றைக்கு துபாயில் இந்த படம் பார்ப்பதற்காக டிக்கெட் வாங்கி  'கிழித்து' போட்டு தான் உள்ளே போய் படம் பார்த்திருக்கான். இப்படி ஒரு தருணத்தை கொடுத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு நன்றி.  இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நான் அழுதது எல்லாம் நிஜமானது. மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஷூட் பண்ணாங்க. என்னை போட்டு சாகடிக்கிறாரேன்னு நினைச்சேன். நான் படங்கள் பண்ணிருக்கேன். நல்ல நடிக்கிறேன் என பெயர் வாங்கிருக்கேன். சினிமாவில் வந்து இப்பதான் வெற்றியையே பார்க்கிறேன்” என நெகிழ்வுடன் தெரிவித்தார். 




மேலும் படிக்க: Bigg Boss 7 tamil: சாப்பாட்டால் நடந்த கலவரம்.. பிக்பாஸை திட்டிய பூர்ணிமா.. 11 ஆம் நாளில் நடந்தது என்ன?