போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின்னர் இருவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை  சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதுதொடர்பான வழக்கை நீதிபதி நிர்மல்குமார் நேற்று விசாரித்தார். 

அப்போது நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் முதல் எதிரி அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவரிடம் இருந்து எந்தவித போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை என வாதாடினார். அதேபோன்று நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வக்கீல், கிருஷ்ணாவிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை என கூறினார். 

இதுதொடர்பாக போலீசார் தரப்பில், போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமீன் மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து ரூ.10,000 சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு அதே தொகைக்கு இரண்டு நபர்கள் ஜாமீன் அளிக்க வேண்டும் எனவும், மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை வழங்கினார்.