யோகி பாபு


நகைச்சுவை நடிகர் யோகி பாபு போட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளரிடம் சொடக்கு போட்டு மைக்க ஆப் பண்ணிட்டு "வெளியே வா பேசிக்கொள்ளலாம்" என பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. சின்னது பெரிது என்று இல்லாமல் சரமாரியால அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். ஒரு படத்திற்கு நாயகனில் கால்ஷீட் கூட கிடைத்துவிடும் ஆனால் யோகிபாபுவும் கால் ஷீட் கிடைப்பதுதான் சவாலானதாக மாறிவிட்டது.


ஒரே நேரத்தில் வெவ்வேறு படங்களின் படப்பிடிப்புகள் என பிஸியாக இருக்கும் யோகி பாபு மீது தயாரிப்பாளர்கள்  சங்கத்தில் நிறைய புகார்கள் சமர்பிக்கப்பட்டிருக்கின்றன. படத்தில் நடிப்பதற்கான முன்பணம் அல்லது சம்பளத்தைப் பெற்றுக்கொண்டும் படப்பிடிப்பிறகு சரியான தேதிகளை ஒதுக்குவதில்லை.


அதனால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். அதன்படி யோகி பாபு நடிக்கும் படங்களுக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 


பத்திரிகையாளர் சந்திப்பிற்கு தாமதம்


இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ள படம்தான் போட். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. மாலை 6 மணிக்குத் நிகழ்ச்சி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் படக்குழுவினர் மாலை ஏழு மணிக்கு வந்து சேர்ந்தனர்.


ஆனால் யோகி பாபு மட்டும் நிகழ்ச்சி முடியும் தருணத்தில் இரவு 9 மணிக்கு கடைசியாக வந்து சேர்ந்தார். தென்காசியில் இன்னொரு படப்பிடிப்பு இருந்ததாகவும் இந்த நிகழ்விற்காகத்தான் 10 மணி நேரம் பயணம் செய்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார் அவர்.


"எல்லா கம்பெனியும் அட்ஜஸ்ட் செய்துகொள்ள மாட்டார்கள். என்னுடைய சூழல் அப்படி... என்னை நீங்கள் தப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உங்கள் கோபம் எனக்கு புரிகிறது. என்னை மன்னித்து விடுங்கள்" என்றார்.


நிகழ்ச்சியில் பேசி முடித்த யோகிபாபு திரும்பிச் செல்லும்போது செய்தியாளர் ஒருவர் அடுத்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நீங்கள்தான் என்று சொல்கிறார்கள் என்று கூறியுள்ளார். அவருக்கு சொடக்கு போட்டு  யோகிபாபு "நீ மைக்க ஆப் பண்ணிட்டு வெளிய வா பேசிக்கலாம்"  என்றார்.