யோகி பாபு நடிப்பில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்சன்ஸ், யாழி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம்  'பொம்மை நாயகி'. ஷான் இயக்கியுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள  நிலையில், நேற்று படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது படத்தின் கதாநாயகன் யோகி பாபு பேசியதாவது:


ரஞ்சித்துடன் இணைய காரணம்


”பொம்மை நாயகி படத்தில் ஷான் என்னை காமெடி பண்ண விடவில்லை. ஏனென்றால் கதை அதற்கு ஏதுவானது இல்லை. நீலம் ப்ரொடக்‌ஷனில் ரஞ்சித்தின் அட்டகத்தி படத்தில் முதலில் நடித்தேன். அப்போது எனக்கு 20 நாள்கள் கேட்டிருந்தார் ரஞ்சித். ஆனால் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்த என்னால் அப்போது நடித்து தர முடியவில்லை.


அதன் பிறகு நீண்ட நாள்கள் கழித்து ரஞ்சித் உடன் இணைவதற்கு காரணமாக இருந்துள்ள மாரி செல்வராஜூக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


ஏனென்றால் மாரி செல்வராஜ் - ரஞ்சித் சார் இருவரும் தான் பரியேறும் பெருமாள் படத்தில் நான் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவெடுத்தனர். அது முதல் எங்கள் உறவு தொடர்கிறது. 


நான் காமெடி தான்!


எனக்கு பெண் குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆகியுள்ளது. ஒரு அப்பாவுக்கு எவ்வளவு வலி இருக்கும் என்பது எனக்கு இப்போது தான் புரிகிறது.


இந்தப் படம் முழுவதும் என்னிடம் நான் ஒரு நல்ல உணர்வுப்பூர்வமான நடிகர் என்று கூறினார்கள். ஆனால் இவை அனைத்தும் ஒரு இயக்குநரின் கையில் தான் உள்ளது. படத்தின் இயக்குநர் ஷான் அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார். 


நான் எல்லா மேடையிலும் காமெடியன், காமெடியன் என மீண்டும் மீண்டும் சொல்வதற்கு காரணம் அது தான் என் தொழில். அந்த ஒரு விஷயத்துக்காக தான் ரோடு ரோடாக நடந்திருக்கிறேன்” என்றார்.


உருவக்கேலி


பன்றிவாயன் என சொன்னவர்களுக்கு பலநூறு படங்கள் நடித்து பதிலடி  தந்தார் எனக்கூறி நிகழ்ச்சி தொகுப்பாளினியும் பத்திரிகையாளருமான கவிதா நடிகர் யோகி பாபுவை அறிமுகப்படுத்திய நிலையில், அது குறித்துப் பேசிய யோகி பாபு, “தொகுப்பாளர் சொன்னது போல் என்னை பலர் கிண்டல் செய்திருக்கிறார்கள். எல்லாருக்கும் நடப்பது எனக்கு கொஞ்சம் அதிகமாக நடந்திருக்கிறது. 


தமிழ் சினிமா என்று இல்லை எந்த சினிமா போனாலும் நான் காமெடியன் தான். மாரி சொன்னது போல் இந்த முகத்தில் ஏதோ ஒன்று இருக்கு இவரை கொண்டு போய் படம் பண்ணலாம் என நினைப்பவர்கள் வாருங்கள். தாராளமாக படம் பண்ணலாம்” எனப் பேசி முடித்தார்.