நடிகர் விமல் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த காமெடி திரைப்படமான தேசிங்கு ராஜா இன்றோடு 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


எழிலின் காமெடி படம்


பூவெல்லாம் உன் வாசம், துள்ளாத  மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு, தீபாவளி உள்ளிட்ட காதல் படங்களை இயக்கி வெற்றிக் கண்ட இயக்குநர் எழில் தனது இரண்டாவது இன்னிங்ஸை காமெடி படங்கள் மூலம் தொடங்கினார். அந்த வகையில் வெளியானது தேசிங்கு ராஜா.


இந்த படத்தில் விமல். பிந்து மாதவி, சூரி, சிங்கம் புலி, ஆடுகளம் நரேன், ரவி மரியா, வனிதா, சிங்கமுத்து, சாம்ஸ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். நடிகை முக்தா பானு ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தனர். டி.இமான் தேசிங்கு ராஜா இசையமைத்திருந்தார். 


படத்தின் கதை


கிளியூர், புலியூர் ஆகிய இரு கிராமங்களுக்கு இடையே மிகப்பெரிய பிரச்சினை இருந்து வரும் நிலையில், கொலைகளும் நடைபெற்று வருகின்றன. இப்படியான நிலையில், கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த விமல், புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பிந்து மாதவியுடன் காதல் வயப்படுகிறார். இருவருக்கும் திருமணம் நடந்தால் ஊர் பிரச்சினை தீரும் என விமல் சொன்ன பேச்சை கேட்டு பிந்துமாதவி திருமணத்துக்கு சம்மதிக்கிறார்.


இப்படியான நிலையில், பழிக்கு பழியாக பிந்து மாதவி அப்பா திருமணம் நடந்த இடத்தில் கொல்லப்படுகிறார். அதற்கு காரணம் விமல் தான் என அவரை பிந்து மாதவி ஒதுக்குகிறார். கடைசியில் இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா என்பதே இப்படத்தின் கதையாகும். 


சூரியின் அக்மார்க் காமெடி 


நடிகர் சூரியின் சிறந்த காமெடி காட்சிகள் நிறைந்த படமாக தேசிங்கு ராஜா அமைந்தது. ‘தாமரை கோ-ஆப்ரேட் பண்ணு’, ‘அடே செங்கோடா’ தொடங்கி ரவி மரியா, சிங்கம் புலி, சாம்ஸ் உடனான காமெடி காட்சிகளை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதேபோல் இமானின் இசையில் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற தேசிங்கு ராஜா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: “வா வாத்தியாரே முதல் கருத்தவன்லாம் கலீஜாம் வரை”.. சென்னையின் பெருமையை பேசும் டாப் 10 பாடல்கள்..!