நடிகர் விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் படம் வெளியாகியுள்ள நிலையில், அவர் கிரிக்கெட் போட்டியில் மன்கட் முறையில் அவுட் செய்தது பற்றி பேசியுள்ளார். 


ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியாகியுள்ள லால் சலாம் படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். அதேபோல் நிரோஷா, ஜீவிதா, தன்யா பாலகிருஷ்ணா, செந்தில், தம்பி ராமையா, கே.எஸ்.ரவிகுமார் என பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கபில்தேவ் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 


லால் சலாம் படம் நேற்று தியேட்டரில் வெளியான நிலையில் இப்படத்தின் ஹீரோ விக்ராந்த், தான் கிரிக்கெட் போட்டியில் மன்கட் முறையில் அவுட் செய்தது பற்றி பேசியுள்ளார். அதாவது, “கடந்த 2012 ஆம் ஆண்டு திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்ற செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரின் 2வது சீசன் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் கர்நாடகா புல்டவுசர்ஸ் மற்றும் சென்னை ரைனோர்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை அணியில் விஷால், ஜீவா, விக்ராந்த், மிர்ச்சி சிவா, ரமணா, ஆர்யா, சாந்தனு, பிரித்வி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.


இந்த போட்டியில் கடைசி ஒரு பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் கடைசி ஓவரின் கடைசி பந்தை வீசிய விக்ராந்த் மன்கட் முறையில் அவுட் செய்தார். இதனைப் பற்றி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். 


செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் இரண்டாவது சீசனில் ஒரு பிரச்சினை நடைபெற்றது. ஒரு பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் நான் பவுலிங் போட்டு மன்கட் முறையில் அவுட் செய்து விட்டேன். எனக்கும் நடிகர் கிச்சா சுதீப் இடையே பயங்கர பிரச்சினையாக விட்டது. ஆனால் இன்னைக்கு எனக்கு உடன்பிறவா அண்ணன் மாதிரி இருக்காரு. அவர் தான் வர்றோம், என்ஜாய் பண்றோம்ன்னு இல்லாம அத்தகைய கிரிக்கெட் போட்டிகளை சீரியஸாக மாற்றினார். அதைப் பார்த்து தான் மற்ற நட்சத்திரங்கள் சீரியஸாக விளையாடினார்கள். 



மேலும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த், கபில்தேவ் போன்ற லெஜண்ட் கூட பக்கத்துல இருப்பது நிஜமாகவே ஆசீர்வாதமாக உணர்ந்தேன். இரண்டு பேரும் பேசிட்டு இருப்பதாக ஒரு காட்சி இருக்கும். அதில் நான் பேட்டிங் செய்து விட்டு பவுலிங்கும் போடுவேன். அந்த காட்சி முடிந்ததும் அவரை தாண்டி நான் போகும்போது கபில்தேவ் என்னிடம், ‘கிரிக்கெட் விளையாடுவிங்களா? நீங்கள் தொழில்முறை கிரிக்கெட்டரா?’ என கேட்டார். நான் உங்களின் பவுலிங்கை பார்த்து கேட்டதாக சொன்னார். நிறைய விஷயங்களை கிரிக்கெட் வீரர்களுக்கு சொல்லி தருவது போல கபில்தேவ் கற்றுக் கொடுத்தார்” என கூறினார்.