நடிகர் விக்ரமின் கோப்ரா படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் காலை முதலே தியேட்டர்களில் குவிந்து வருகின்றனர். 






தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் மகான் படத்திற்கு பிறகு நடித்துள்ள படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கேஜிஎஃப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் கோப்ரா படத்தில் விக்ரம் 9 விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.


இந்த படத்தை செவன்த் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ள நிலையில் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது.  2 முறை படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போன நிலையில்  ஆகஸ்ட் 31 ஆம் தேதி கோப்ரா வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். 






இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோப்ரா படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. காலை 4 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டதால் ரசிகர்கள் நள்ளிரவு முதலே தியேட்டருக்கு வர தொடங்கினர். கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்குப் பின் விக்ரம் படம் தியேட்டரில் வெளியாகியிருந்தது. இதனால் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்க சென்னை ரோகிணி தியேட்டருக்கு விக்ரம் தனது மகன் துருவ் உடன் ஆட்டோவில் வந்திறங்கினார். உள்ளே சென்ற அவர் பால்கனியில் இருந்து ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். 






இவர்களுடன்  கென் கருணாஸ், நடிகை மிர்ணாளினி, ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோரும் படம் பார்க்க வந்திருந்தனர். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.